வேதி பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்.. காவல் துறை தகவல்
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட வேதிப் பொருட்களை ஜமேஷா முபின் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு சென்ற கார் ஒன்று சங்கமேஸ்வரர் கோயில் முன்பு வேகத்தடையை கடந்த போது திடீரென வெடித்து தீப்பிடித்தது.
விசாரணையில் உயிரிழந்த நபர் உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் முபினின் வீட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

வெடிபொருட்கள்
அப்போது அங்கு வெடிபொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், வயர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த தினத்திற்கு முன் தினம் இரவு முபின் தனது கூட்டாளிகளுடன் காரில் ஏதோ ஒரு பொருளை தூக்கி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை போலீஸ்
இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்கு பாய்ந்தது. முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும்.

நிறைய வெடிகுண்டு
இதிலிருந்து அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவரும்.

6 பேர் கைது
இந்த சதி திட்டத்தின் பின் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போலீஸார் கண்டுபிடித்து வருகிறார்கள். அனைத்து கோணங்களிலும் விசாரணையானது நடைபெறுகிறது. 6 பேர் கைது செய்யப்பட்டது அல்லாமல் நிறைய பேரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

வெடி சப்தம்
சம்பவம் நடந்த அன்று ஒரு வாகனம் மெதுவாக வந்து கொண்டிருந்தது. அதை போலீஸார் நிறுத்த முயன்ற போது பெரிய அளவில் சப்தம் ஏற்பட்டு கார் வெடித்தது. உடனே போலீஸார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். கோவை சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். தற்போது கைதானவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications