கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு திமுக கூட்டணி மமக தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு?
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரிப்பதற்கு திமுக கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இன்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனை நாங்கள் சந்தித்து பேசினோம். 1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது பொதுமக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகினர். பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்ப சில ஆண்டுகளாகின.
பெண்களை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி நூல் இதுதான்..தமிழகம் முழுவதும் மக்களுக்கு இலவசமாக கொடுத்த விசிக!
கமிஷனருடன் சந்திப்பு
தற்போது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட வேண்டியது அனைவரின் கடமை. இனி இதுபோல் எந்த ஒரு சம்பவமும் நிகழ்ந்துவிடக் கூடாது. இதனைத்தான் கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து பகிர்ந்து கொண்டோம். கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான நடவடிக்கைகளையும் அமைதி முயற்சிகளையும் ஆணையர் எங்களிடம் தெரிவித்தார்.
அமைதி முயற்சிகள்
கடந்த 1998-ம் ஆண்டு குண்டுவெடிப்பின் போது கமிஷனர் ராதாகிருஷ்ணன் கோவையில் அமைதி திரும்ப பாடுபட்டார். அதே உணர்வோடு தற்போது கமிஷனர் பாலகிருஷ்ணன் அமைதி திரும்ப செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை ஒற்றை ஓநாய் தாக்குதல் என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த ஒற்றை நபருக்கு இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்த பின்னணி என்ன? அவரை இயக்கியது யார் என்பது வெளிக்கொண்டு வரவேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான ஜெகர்ஹான் என்ற அயோக்கியனுடன் இவர்கள் தொடர்பில் உள்ளதாக தகவல் வருகிறது. அதே நேரத்தில் யாருக்கு அரசியல் லாபம் என்ற பின்னணியும் வரவேண்டும். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கில் உள்ளது. அதன் ஆதரவாளர்களால் இஸ்லாமிய சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் அமைதி சீர்குலைவு ஏற்படுகிறது. இவர்கள் யாரின் அரசியல் லாபத்திற்காக கையாட்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களது கேள்வி? உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பான முறையில் விசாரணை செய்ய வேண்டும்.
அண்ணாமலை முரண்பாடு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். அவர் அளித்த பேட்டியில், 2019-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் உள்ளது என்கிறார். இன்னொரு பேட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் காவல்துறையின் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டது என்கிறார். இப்படி காவல்துறை சிறப்பாக செயல்பட்டிருந்தால் 2019 முதல் எப்படி சீர்குலைவு நடைபெற்று இருக்கும்?
என்.ஐ.ஏ. விசாரணைக்கு அதிருப்தி?
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மாலைக்குள் அனைத்து விஷயங்களையும் கொண்டு வந்தது நமது தமிழக காவல்துறை. எனது கருத்துப்படி கார் வெடிப்பு சம்பவத்தை தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டும். அப்படி விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரும். இந்த சம்பவத்தில் என்.ஐ.ஏ. என்ன செய்யப் போகின்றது என்பது ஒரு கேள்வி குறி தான். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.