பாத்தீங்களா... கடைசில மம்தாவே எங்க திட்டத்தைத்தான் காப்பியடிக்கிறாங்க.. கமல்ஹாசன் கலகல!
கோவை: பஸ்சில் சென்று கொண்டிருந்த என்னை மக்கள்தான் ஹெலிகாப்டரில் செல்ல வைத்தனர் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.
எனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை. கல்லூரிகளில் மாணவர்களிடம் நான் பேசி விடக்கூடாது என மறைமுக தடை ஏற்படுத்துகின்றனர் என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
அரசியல் கட்சிகளின் பிரசாரம், வேட்பு மனு தாக்கல் என்று தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் தங்கவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உடன் இருந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

மக்கள்தான் காரணம்
எங்கள் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனைக்கு நடந்துள்ளது. அரசியல் காரணமாகவும் இந்த சோதனை நடந்து இருக்கலாம். இதுக்கு அவர்களே பதில் சொல்லட்டும் . நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்வது பற்றி பேசுகிறார்கள். நான் அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை.எனது பணத்தில்தான் செல்கிறேன்.எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை. பஸ்சில் சென்று கொண்டிருந்த என்னை மக்கள்தான் ஹெலிகாப்டரில் செல்ல வைத்தனர்.

எனக்கு தடை ஏற்படுத்துகின்றனர்
இதற்காகதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். குறுகிய காலத்திற்குள் செல்லத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன். வேட்பாளர்களுக்கு தோள் கொடுக்க இத்தனை இடங்களுக்கு செல்கிறேன். எனது கட்சி நிகழ்ச்சிகளுக்கு பல இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை. கல்லூரிகளில் மாணவர்களிடம் நான் பேசி விடக்கூடாது என மறைமுக தடை ஏற்படுத்துகின்றனர்.

தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்
எல்லோரும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர், எங்களது தேர்தல் அறிக்கை வருவது நல்லதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னதை மற்றவர்கள் தற்போது திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நல்ல விஷயங்கள் மக்களுக்கு கிடைக்க நாங்கள் முன்னோடியாக உள்ளோம். இப்போது கூட இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் தருவதாக நாங்கள் அறிவித்த திட்டத்தைத்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் என்று கமல்ஹாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications