இளையராஜாவிடம் நான் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுதான் பாடுகிறேன்.. மகன் கார்த்திக் ராஜா
கோவை: இளையராஜாவின் பாடல்களை எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றே பாடி வருகிறேன் என அவருடைய மூத்த மகன் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தோம். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் இந்த நிகழ்ச்சியின் இடத்தை கோவைக்கு மாற்றியுள்ளோம்.
கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களும் இடம் பெறும். 3 முதல் 4 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் 35 பாடல்களை பாடுவோம். மக்களை பார்த்து இலவசமாக பாட சொன்னாலும் பாடுவேன்.
பாடல்களின் ரசனை ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். நம்ம ஊர் மக்களுக்கு மதுர மரிக்கொழுந்து பாடல்கள் பிடிக்கும். ஆனால் வெளியூர்களில் வேறு விதமான பாடல்களை ரசிக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தமிழர்கள் சினிமா, இசை என்றால் அதிகம் நேசிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்வு செய்துள்ளோம்.
அது மட்டுமே பாடுவோம். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் பாடும் போதும் அவரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுதான் பாடுவோம். முன்பெல்லாம் பாடல்கள் அதிக நேரம் இருந்த நிலையில் தற்போது பாடலின் நேரம் குறைந்துவிட்டது. அன்று இலை வைத்து ஒவ்வொரு உணவாக வைத்தோம். இன்று பாஸ்ட் புட் போல் பர்கர், பீட்சா போல் எல்லாத்தையும் ஒன்றாக ஆக்கிவிட்டோம்.
அடுத்த இரு மாதங்களில் எனது இசையில் இரு படங்கள் வெளியாகவுள்ளன என கார்த்திக் ராஜா தெரிவித்திருந்தார். இளையராஜா பாடல்கள் விவகாரத்தில் காப்புரிமை பிரச்சினை பெரும் விவகாரமாக மாறியுள்ளது. இளையராஜா தான் பாடிய பாடல்களில் 4500 பாடல்களை எக்கோ அன்ட் அகி ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஒப்பந்தம் 2014 ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தன்னுடைய பாடல்களை அந்த நிறுவனம் பாடி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளரிடம் உரிமை பெற்ற பிறகு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது. இளையராஜாவுக்கும் இசை பாடல்கள் மீதும் தனிப்பட்ட தார்மீக சிறப்புரிமை இருக்கிறது என 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதி, நீதிமன்றம் உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள். அத்துடன் இளையராஜா அளித்த புகார் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எக்கோ நிறுவனம் , பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில் படத்தில் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் உள்ளது. இசையமைப்பாளர் பாடலுக்கு ஊதியம் பெற்ற பிறகு அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார்.
காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்றால் கிடையாது. இளையராஜா தன்னை எல்லோருக்கும் மேலானவர் என நினைத்துக் கொண்டிருக்கிறார் என கூறினர். இதற்கு இளையராஜா, ஆமாம் நான் எல்லோருக்கும் மேலானவன்தான் என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications