கோவை கார் பந்தயத்தில் சட்டென்று வந்த கார்டியாக் அரெஸ்ட்.. அடுத்த நொடி நடந்த ஷாக்.. திடுக் சம்பவம்
கோயம்புத்தூர்: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டியில் கேரள மருத்துவர் திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்டால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், தேசிய அளவிலான ப்ளூ பேண்ட் கார் ரேலி சாம்பியன்ஷிப் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி 2024ஆம் ஆண்டில் மொத்தம் ஆறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டுக்கான முதல் சுற்று சென்னையிலும், இரண்டாவது சுற்று நாசிக்கிலும் நடந்துள்ளன.

இந்நிலையில் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் கோவை எல் அண்டி பைபாஸ் சாலை அருகே நேற்று தொடங்கின. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து போட்டிகளை தொடக்கிவைத்தார். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் அரசு மருத்துவனையின் நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் பிரேம்லால் (46) கலந்து கொண்டார். செட்டிநாடு ஸ்போர்டிங் அணிக்காக அவர் மருத்துவர் ரிஷிகேஸ் என்பவருடன் பந்தயத்தில் பங்கேற்றார். நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களுக்கு இந்தப் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று காலை 2 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மதியம் 1.30 மணியளவில் அரை மணி நேரத்துக்கு சர்வீஸ் பிரேக் விடப்பட்டிருந்தது.
அப்போது காரில் இருந்து இறங்கி வரும்போது, பிரேம்லாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பிரேம்லாலுக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிரேம்லால் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். இதையடுத்து அவரின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது பிரேம்லால் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கார் பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேம்லாலுக்கு கார் டிரைவிங் மீது அலாதி பிரியம். கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கார் பந்தயங்களிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அவரின் மனைவி ஸ்மிஜா அரவிந்தும் மருத்துவர்தான். இந்தத் தம்பதிக்கு விஷ்ணு மற்றும் அனிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications