கோவையில் மனைவியை கொன்றதும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய கேரளா கணவர்! 10 நிமிடத்தில் நடந்தது என்ன?
கோவை: கோவையில் தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு கேரளாவின் பாலக்காடு சென்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பல்வேறு தகவல்களை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் பட்டணம்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (50). இவரது மனைவி சங்கீதா (47). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஒருவர் பிளஸ் 1 வகுப்பும் இன்னொருவர் 8ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

சங்கீதா ஆசிரியையாக இருந்தார். அவரது குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்ட நிலையில் கிருஷ்ணகுமார், மனைவி சங்கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு கேரளாவின் பாலக்காடு சென்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கான காரணம் அறியப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து போலீஸார் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகுமார் பட்டணம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்தாராம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இவர்கள் இருவர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது.
எனினும் கிருஷ்ணகுமாருக்கும் சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்படுமாம். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவும் ஆலோசனை நடத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டில் வசித்து வந்தாராம்.
அவ்வப்போது கோவைக்கு வந்து குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வாராம். கடந்த புதன்கிழமை, கிருஷ்ணகுமார், கோவைக்கு வந்து தனது இரு மகள்களையும் பார்த்துவிட்டு இருவருக்கும் பாஸ்போர்ட் பெறுவது குறித்து பேசியிருந்தாராம்.
சம்பவத்தினத்தன்று கோவைக்கு வந்த கிருஷ்ணகுமார், தனது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வரை காரிலேயே காத்திருந்தாராம். பிறகு அவர்கள் பள்ளிச் சென்றதும் தனது ஏர் கன்னுடன் வீட்டிற்குள் சென்றாராம். அங்கு சங்கீதாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த வாக்குவாதம் கடுமையாக முற்றியதில் கோபமடைந்த கிருஷ்ணகுமார், துப்பாக்கியால் சங்கீதாவின் நெஞ்சில் சுட்டுள்ளார். பின்னர் 10 நிமிடங்களுக்குள் எல்லாம் முடிந்தவுடன் கிருஷ்ணக்குமார் தனது காரில் ஏறி பாலக்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் போதே சமூகவலைதளங்களில் குரல் வழி செய்தியை (வாய்ஸ் மெசேஜ்) அனுப்பியுள்ளார்.
அதில் தனது மனைவி சங்கீதாவை கொன்றுவிட்டதாகவும் தான் நீண்ட காலம் வாழ மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தாராம். இதனால் பதறியடித்த அக்கம்பக்கத்தினர், சூலூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சங்கீதாவின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பாலக்காடு சென்ற கிருஷ்ணக்குமார், மனைவியை சுட்ட அதே துப்பாக்கியால் தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயும் தந்தையும் இறந்த நிலையில் அவர்களது இரு குழந்தைகளும் தற்போது கோவையில் சங்கீதாவின் தாய், அதாவது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களிடையே என்ன விவகாரத்தில் வாக்குவாதம் நடந்தது என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications