கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: கோவை ஆறுமுகசாமி மகன் செந்தில்குமாரிடம் இன்றும் விசாரணை
கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் இன்றும் விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இந்த கொலை, கொள்ளை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய பலரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
இக்கொலை, கொள்ளைகள், மர்ம மரணங்கள் பின்னணி குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் பின்னணியில் உள்ள அரசியல் புள்ளிகள் குறித்தும் பூடகங்கள் மட்டுமே பேசுபொருளாகி இருந்தன.

இந்நிலையில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவ்வழக்கில் தற்போது மறு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இவ்வழக்கில் ஏற்கனவே சிக்கிய சஜிவன் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டன.
இந்நிலையில் திடீரென கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் மகனான செந்தில்குமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கொடநாடு பங்களாவை பராமரிக்கும் பணியை முன்னர் செந்தில்குமார் நிறுவனம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில்தான் அவர் விசாரணைக்கு வர வேண்டும் என்று தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மன் அடிப்படையில் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை முன்பு கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் நேற்று செந்தில்குமார் ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications