கோவையில் கியாஸ் சிலிண்டர் அடாவடி: மத்திய அரசு விதியை மீறி 36 நாட்களாக உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக்
கோவை: உலகமே ஈரான் - அமெரிக்கா போரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க, அதன் நேரடி பாதிப்பு இந்தியாவின் அனைத்து ஊர்களையும் ஆட்டிப்படைக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, கோவையில் உள்ள கியாஸ் ஏஜென்சிகள் மத்திய அரசின் விதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் இஷ்டத்திற்குச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்திருக்கிறது. ஏனெனில் மத்திய அரசின் உத்தரவை மீறி 36 நாட்களுக்குப் பிறகு தான் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என்று ஏஜென்சிகள் அறிவித்து உள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகிறார்கள்.
ஈரான் -அமெரிக்கா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிலிண்டல் முன்பதிவை 15 நாட்களில் இருந்து 45 நாட்களாக பல ஊர்களுக்கு அரசு மாற்றியது. நகராட்சிகளுக்கு மட்டும் ஒரு சிலிண்டருக்கும் மற்றொரு சிலிண்டருக்கும் பதிவு இடைவெளி 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. (உண்மையில் பல நகரங்களுக்கு 45 நாட்களாகவே உள்ளது) அத்துடன் வீட்டு உபயோக சிலிண்டருக்குப் பதிவு செய்தால் 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகே வீட்டுக்கு வந்தது. மாநகராட்சியில் மட்டும் நடைமுறை அப்படியே இருந்தது.

ஆனால் கோவையில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் வினியோகம் செய்யும் ஏஜென்சிகள் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து 28 நாட்கள் கழித்தும் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் முறையை மாற்றினார்கள். இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வரகிறார்கள்.
மேலும் வாடிக்கையாளர்கள் அந்தந்த கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று சிலிண்டர் எப்போது வரும் என்று கேட்டு வருகிறார்கள். அப்போது சமையல் கியாஸ் ஏஜென்சி நிறுவனங்கள் தரப்பில் ஒரு சிலிண்டர் வாங்கி 36 நாட்கள் கழித்து தான் மற்றொரு கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.
பொதுவாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு 28 நாட்கள் இடைவெளி கொடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை மீறி கோவையில் 36 நாட்கள் கழித்த பிறகே சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியும் என்று ஏஜென்சிகள் கூறுவது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயல் என்று வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இது குறித்து சிலிண்டருக்கு முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வரும் வாடிக்கையாளர்கள் கூறும் போது, கோவையில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஒரு ஏஜென்சியில் இருந்து வாடிக்கையாளர் ஒருவருக்கு கியாஸ் முன்பதிவு செய்யும் கால அவகாசம் 28 நாட்கள் என்று குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அவகாசம் முடிந்து 29-வது நாளில் முன்பதிவு செய்ய முயன்றால் முன்பதிவு ஆவதில்லை. இது தொடர்பாக அந்த ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டால் எங்களுக்கு 20 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. 8 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து சிலிண்டருக்காக காத்திருக்கிறார்கள். 300 சிலிண்டர்கள் தான் வழங்கப்படுகிறது. இதனால் 36 நாட்கள் கழித்து தான் புக்கிங் செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். இதுதவிர கியாஸ் ஏஜென்சியை மீண்டும் மீண்டும் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள்.
இதுபோன்று தான் பல கியாஸ் ஏஜென்சிகளும் உள்ளன. சில ஏஜென்சிகள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்கும் நிலையும் இருக்கிறது. 28 நாட்கள் கழித்து முன்பதிவு செய்யலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறும் கியாஸ் ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தனி அதிகாரியை நியமித்து கண்காணிக்க வேண்டும். 28 நாட்கள் முடிந்ததும் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications