கழிவறை கழுவி ஏழை குழந்தைகளுக்கு உதவி.. கோவை லோகநாதனை மன் கீ பாத்தில் பாராட்டிய மோடி! யார் இவர்?
கோவை: கழிவறை கழுவி 1500 ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் கோவை லோகநாதனை பிரதமர் மோடி இன்று தனது மன் கீ பாத் உரையில் பாராட்டினார். இந்நிலையில் தான் கோவை லோகநாதன் குறித்து சிலிர்க்க வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மன் கீ பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அதன்படி நவம்பர் மாதத்துக்கான மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த லோகநாதனை பாராட்டி பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: நண்பர்களே நான் எப்போதும் ஒன்றை உறுதியாக கூறி வருகிறேன். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்வது என்பது ஒருநாள் அல்லது ஒரு வாரத்துக்கான பிரசாரம் என்பது இல்லை. இது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டிய முயற்சியாகும். அந்த வகையில் தமிழ்நாட்டில் கோவையில் வசித்து வரும் லோகநாதன் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன்.
இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடைகள் அணிவதை பார்த்து மனம் உடைந்தார். இதையடுத்து ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை அவர் ஏழை குழந்தைகளுக்கு வழங்க தொடங்கினார். பணப்பற்றாக்குறை ஏற்பட்டபோதும் கூட லோகநாதன் கழிவறைகளை சுத்தம் செய்து பணம் சம்பாதித்து வழங்கி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக முழு அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார் லோகநாதன். இதுவரை 1500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார். அவரது இந்த முயற்சிக்காக மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். நாடு முழுவதும் நடக்கும் இதுபோன்ற பல முயற்சிகள் நமக்கு ஊக்கமளிப்பதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றன'' என புகழ்ந்து பேசினார்.
பிரதமர் மோடி பாராட்டி பேசிய லோகநாதன் கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். இவரது 10 வயதில் தந்தை உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து லோகநாதன் உள்பட 3 குழந்தைகளையும் அவரது தாய் இளநீர் வியாபாரம் செய்து காப்பாற்றினார். 3 பேரையும் படிக்க வைக்க முடியாத நிலையில் லோகநாதன் 6ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.
அதன்பிறகு தாய்க்கு உதவுவது, கிடைத்த வேலைகளை செய்தார். வட மாநிலங்களுக்கு அடிக்கடி சென்ற நிலையில் தொழிலாளர்கள், குழந்தைகள் படும் கஷ்டத்தை பார்த்த நிலையில் அவர் உதவி செய்ய தொடங்கினார். இதற்காக அவர் கழிவறையை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications