ஆமா முருகனுக்கு 2 மனைவியா, 3 மனைவியா.. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் பேச்சால் சலசலப்பு
கோவை: தமிழ்க் கடவுள் முருகனுக்கு 2 மனைவியா 3 மனைவியா என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேட்டதை அடுத்து சலசலப்பு ஏற்பட்டது. முருகன் திணை மாவை எப்படி கண்டுபிடித்தார் என்றும் கேட்டு மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கம் நடந்தது. இதில் உணவு பொருட்கள் கணகாட்சியும் நடந்தது. இந்த விழாவில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

அந்த கருத்தரங்கில் பன்னீர் செல்வம் பேசுகையில் முருகன் சர்க்கரை வியாதி வரக் கூடாது என்பதற்காகவே திணையை சாப்பிட்டார். அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா?ஆமாம் இரண்டு திருமணம்தான்.
அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் திணை மாவு சாப்பிட்டார். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதை கவனித்த அமைச்சர் ஒன்றுமில்லை, நான் சாதாரணமாக கிண்டலாக ஜோவியலாக பேசுகிறேன் என மீண்டும் எதையோ கூறி சர்ச்சையை கிளப்பினார்.
மேலும் திணையை முருகன் எப்போது கண்டுபிடித்தார் என தெரியவில்லை என்றார். தமிழ்க் கடவுளான முருகனை பற்றி இப்படி அமைச்சர் பேசியதால் மக்கள் கோபத்தில் விமர்சிக்கத் தொடங்கினர். இதையடுத்து அமைச்சர் பேசுவதை நிறுத்திவிட்டு போய் உட்கார்ந்தார். முதல்வர் ஸ்டாலின் எத்தனையோ முறை அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
தூங்கி எழுந்தால் யார் என்ன பிரச்சினையை கொண்டு வருவார்கள் என்ற அச்சம் இருப்பதால் தனக்கு இரவு நேரத்தில் தூக்கமே வருவதில்லை என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனாலும் தொடர்ந்து சர்ச்சை பேச்சுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. திமுக அரசு பதவியேற்ற நாளன்று தொடங்கப்பட்ட இலவச பஸ் பயணத்தை அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அது போல் அமைச்சராக இருந்த எஸ்.எம். நாசர் பொது இடத்தில் கட்சியினர் மீது கல்லை தூக்கி எறிந்த காட்சிகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு நீ எனக்கா ஓட்டு போட்ட என கேட்டுள்ளார். இப்படி அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் திமுக நிர்வாகிகளும் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். தற்போது முதல்வர் ஜப்பானில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications