மீண்டும்.. மீண்டுமா.. கோவை தொகுதி வெற்றிக்காக திமுகவினருக்கு மட்டன் பிரியாணி விருந்து!
கோவை: நாடாளுமன்ற தேர்தலில், கோவை தொகுதியில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக திமுகவினருக்கு இன்று கிடாவெட்டி மட்டன் பிரியாணி விருந்து படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகப்போகிறது. ஆனாலும் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது கோவை தொகுதி. திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டனர். மும்முனைப் போட்டியில் தேர்தல் களம் அனல்பறந்த நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றி விழாவை முப்பெரும் விழாவாக கோவையில் கொண்டாடினர்.

தற்போது கணபதி ராஜ்குமார் எம்பியாக பதவியேற்றும் கோவை தொகுதி லைம்லைட்டில் உள்ளது. தேர்தலுக்காக திமுகவில் நடந்த முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில், அந்தத் தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, 'கோவையில் சுட சுட மட்டன் பிரியாணி தயார்’ என்று கூறினார். அப்போதிருந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலையை சீண்டும் விதமாக, 'கோவையில் மட்டன் பிரியாணி’ என்று திமுகவினரும், அதிமுகவினரும் கூறிவந்தனர். டி.ஆர்.பி ராஜா செல்லும் இடமெல்லாம் அவருக்கு ஆடு பரிசாக வழங்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைய தினமும், திமுகவினர் மக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், டி.ஆர்.பி. ராஜா சார்பில் திமுகவினருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. அதே கோவையில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கவுள்ளது. இருப்பினும் திமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் கோவையின் வெற்றி கொண்டாட்டத்தை விடுவதாய் இல்லை. கோவை தொகுதியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, திமுகவினருக்கு இன்று தனியார் மண்டபத்தில் கிடாவெட்டி மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என்று தடபுடல் விருந்து படைக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுடன்ற தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications