ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்புல்.. அண்ணாமலை கருத்தால் அதிமுகவில் சலசலப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட என் மனைவி 1000 மடங்கு பவர்புல்- அண்ணாமலை
கோவை: என் மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட ஆயிரம் மடங்கு பவர் புல் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கோவையில் நேற்றைய தினம் சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசுகையில் நான் கலைஞர். ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. சில கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள்.

ஜெயலலிதா
சில கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள். நான் ஜெயலலிதா எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன் என உவமையில் அவ்வாறு கூறினேன். என்னை பொருத்தவரை என் தாய், ஜெயலலிதா அம்மையாரைவிட 100 மடங்கு பவர்புல், என் மனைவியோ ஜெயலலிதாவை விட 1000 மடங்கு பவர்புல். நான் நேற்றுமுன் தினம் மதுரை, கோவை விமான நிலையங்களில் என்ன பேசி உள்ளேனோ அதுதான் என் கருத்து.

தனிபாதை
எங்கள் பாதை தனிபாதை, பாஜகவை அதிமுகவுடன் ஒப்பிடாதீர்கள். தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு வேறு கட்சியில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள். பாஜகவில் இருந்து இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர நிர்வாகிகள் கட்சியில் இருந்து செல்கிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பாருங்கள், பெரிய பெரிய தலைகள் பாஜகவில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது.

பெரிய பெரிய தலைகள்
அது போல் அங்கிருந்தும் பெரிய பெரிய தலைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. இங்கிருந்து 4 பேர் போனால் அங்கிருந்து 40 பேர் வருவார்கள் என்றார். இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளது குறித்து செய்தியளர்கள் கேட்ட போது அண்ணாமலை கூறுகையில் ஆன்லைன் ரம்மியை தமிழக பாஜக எதிர்க்கிறது. மறுபடியும் இந்த மசோதாவை சரி செய்து கொடுக்க வேண்டிய வாய்ப்பு தமிழக சட்டசபைக்கு உள்ளது.

மசோதா
மசோதாவை சரி செய்யாமல் அனுப்பி வைத்தாலும் அதனை வேறு வழியில்லாமல் ஆளுநர் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த முறை ஆளுநர் என்ன கருத்தை சொல்லி மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் என்பதை சபாநாயகர் மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

நிர்மல் குமார்
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார், பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துவிட்டு அவர் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி , கூட்டணியில் இருந்து இப்படி செய்யலாமா என நிர்மல் குமாரை அதிமுகவில் சேர்த்தது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இது அதிமுக- பாஜக உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.

தமிழகத்திற்கு எதற்கு வந்தேன்
இது குறித்து விமான நிலையத்தில் அண்ணாமலையிடம் கேட்ட போதுதான் அவர் நான் இட்லி சுடுவதற்காகவோ தோசை சுடுவதற்காகவோ தமிழகத்திற்கு வரவில்லை. நான் ஜெயலலிதா, கருணாநிதி போல் தலைவன், பாஜகவின் மேனேஜர் அல்ல. எனவே எனது முடிவுகள் எல்லாம் அதிரடியாகத்தான். இங்கிருந்து வெளியே போனவர்கள் என்ன சமூகசேவையா செய்கிறார்கள், அவர் வேறு ஒரு கட்சியில் இணைந்து வேறு தலைவருக்கு கோஷம் போடுகிறார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறுகையில், ஜெயலலிதா போன்று இந்தியாவில் ஒரு தலைவரும் இல்லை. இனியும் பிறக்க போவதில்லை. மீசை வைத்திருப்பவர்கள் கட்டபொம்மன் ஆக முடியாது. செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகிவிட முடியாது என பதிலடி கொடுத்திருந்தார்.












Click it and Unblock the Notifications