கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு.. அதிகாலையிலேயே பதறவைத்த என்ஐஏ அதிகாரிகள்.. 3 பேரிடம் விசாரணை
கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களை புழல் சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை (NIA) அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கோவையைச் சேர்ந்த மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
கடந்த மாதம் 21 ஆம் தேதி போத்தனூரைச் சேர்ந்த அபு ஹனிபா, செல்வபுரத்தைச் சேர்ந்த சரண் மாரியப்பன், ஜிஎம் நகரைச் சேர்ந்த பவாஸ் ரஹ்மான் ஆகிய 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தனர். இவர்கள் மூவரும் ஜமேஷா முபினுக்கு பொருளாதார வகையில் உதவி செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதன் மூலம் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து அவர்களை காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக கோவை அழைத்து வந்துள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள என்ஐஏ முகாம் அலுவலகத்துக்கு இன்று காலை அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையின் பல்வேறு இடங்களுக்கு அவர்கள் மூன்று பேரையும் என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications