கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: காவலில் எடுத்த 5 பேரை கோவை அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவலில் எடுக்க 5 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு ஏஜென்சி- தேசிய புலனாய்வு முகாமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை 9 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளது என்.ஐ.ஏ. அண்மையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேர் பிடிபட்டனர்.
கோவையில் உக்கடம் பகுதியில் அக்டோபர் 23-ந் தேதி கார் ஒன்று பயங்கரமாக வெடித்தது. பின்னர் காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இச்சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும் முபினின் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். இதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 1998-ல் பயங்கர குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாத இயக்கமான அல் உம்மா நிறுவனர் பாட்ஷா குடும்பத்தைச் சேர்ந்த
முகமது தல்கா, முகமது அசாருதீன் , முகமது ரியாஸ் , பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான், முகமது தவ்பிக், உமர் பாரூக் பெரோஸ்கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த 9 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 9 பேரில் முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பேரோஸ்கான் ஆகிய 5 பேரை மட்டும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணைகளை மீண்டும் மீண்டும் ஒத்தி வைத்தது. இறுதியாக 5 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது. இதனடிப்படையில் 5 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
தற்போது கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம், அதன் பின்னணி, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு போன்ற சதித் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக 5 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் 5 பேரையும் இன்று கோவைக்கு அழைத்து வந்து சில இடங்களில் அடையாளம் காட்டி விசாரணையும் நடத்தினர்.












Click it and Unblock the Notifications