கோவை கார் வெடிப்பு வழக்கை விசாரிக்க பி.ஆர்.எஸ் மைதானத்தில் என்.ஐ.ஏ அலுவலகம்- உக்கடத்தில் விசாரணை!
கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ-வுக்கு கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சட்டவிரோத பாதுகாப்பு சட்டம்- உபா அல்லது ஊபா பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ. விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். இப்பரிந்துரையை ஏற்று, என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

என்.ஐ.ஏ. விசாரணை
இந்த வழக்கு தற்பொழுது என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து என்.ஐ.ஏ டி.ஐ.ஜி வந்தனா தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு ஆரம்ப கட்ட விசாரணைகளை தொடங்கினர். கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்.ஐ.ஏ.விடம் தமிழக போலீஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

என்.ஐ.ஏ. அலுவலகம்
கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு தனி அலுவலகம் இல்லை. ஆகையால் கோவை ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் என்.ஐ.ஏ வுக்கு இரண்டு அறைகளுடன் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆறு பேர் தற்போது விசாரணைக்கான தொடக்க கட்டப் பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் விசாரணை நடத்த உதவியாக 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 போலீசார் வழங்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் விசாரணை
இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு என்.ஐ.ஏ. எஸ்பி ஸ்ரீஜித் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் இந்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் கோவை மாநகர தனிப்படை போலீசாரும் உடன் இருந்தனர்.

கோவில் முன்பாகவும் சோதனை
அப்போது எஸ்பி ஸ்ரீஜித், இந்த கார் வெடிப்பு சம்பந்தம் தொடர்பாக புகார் அளித்த கோயில் பூசாரி சுந்தரேசனிடம் சில விவரங்களை கேட்டு அறிந்தார். முன்னதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவதை ஒட்டி கோயில் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வை தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோவில் முன்பு வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். இந்த ஆய்வு பணியை முடித்த பின்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேலும் சில இடங்களில் சோதனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications