துடைப்பத்தை பிடித்தபடி வீதியில் இறங்கிய நிர்மலா சீதாராமன்.. வியந்து பார்த்த கோவை
கோவை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் தூய்மை பணியில் ஈடுபட்ட நிலையில், அடுத்த 25 ஆண்டு அமிர்த காலம்தான் என்று தெரிவித்து இருக்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்து இருக்கிறார். மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கோபால்சாமி நாயுடு பள்ளி அருகே தூய்மை பணியில் ஈடுபட்டார்.

அவருடன் அரசு அதிகாரிகள், பாஜகவினர் பலர் தூய்மை பணி மேற்கொண்டார்கள். அதை தொடர்ந்து அவர் அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடமும் உரையாடினார். "இன்று ஒருநாள் மட்டுமே நான் தூய்மை பணி செய்கிறேன். ஆனால், தூய்மை பணியாளர்களான நீங்களோ தினமும் உங்களின் பணியை செய்து வருகிறீர்கள்." என்றார்.
அதன் பின்னர், கோபால் சாமி நாயுடு பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் பள்ளி மாணவிகளுக்கு சந்திரயான் 3 விண்கலத்தின் சிறிய மாடலை வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது, "அடுத்து 25 ஆண்டுகள் அமிர்த காலம். சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெறுவதற்கு நமது விஞ்ஞானிகள் பங்களிப்பு செய்து இருக்கிறார்கள்.

நாட்டின் விண்வெளித் துறையில் பள்ளி மாணவர்களான உங்களுடைய பங்களிப்பும் அவசியம். ஆண்கள். பெண்கள் இருவருமே விண்வெளித் துறையில் சமம்தான்." என்றார். இதனை தொடர்ந்து பீளமேடு கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே உள்ள உள்ள SIDBI புதிய கிளை தொடக்க விழாவில் அவர் கலந்துகொண்டார்.
அதன் தொடர்ச்சியாக கோவை கொடீசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். 3 மணியளவில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகளுடன் நிர்மலா சீதாராமன் கலந்துரையாட உள்ளார். அதை தொடர்ந்து கோவை ராடிசன் புளூ ஹோட்டலில் பெண்களுடன் மத்திய அமைச்சர் கலந்துரையாடுகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட மோதல் பூதாகரமாகி கூட்டணியை விட்டே விலகுவதாக அதிமுக அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications