“திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக 4 கட்சிகளும் எதிரிகள்தான்.. இந்த முறையும் தனித்துப்போட்டி”: சீமான்
கோவை: "வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். தேர்தல்களில் தோற்றுப்போனாலும் கூட்டணியில் சமரசம் இல்லை" என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாதக தனித்துப் போட்டியிடும் என்றும், பெண்களுக்கு சம அளவில் சீட் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கோவையில் பேசிய சீமான், "அரசியல் வரலாற்றில் வாழ்க ஒழிக கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர். தலைவன் வாழ்க என்று கூறுபவர்கள் நாம் அல்ல. தமிழ்த்தாய் வாழ்க என்று கூறுபவர்கள் தான் நாம். வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். 5வது முறையாக களத்தில் தனித்தே நிற்போம். 234 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும், ஆண், பெண் வேட்பாளர்கள் தலா 117 இடங்களில் நிறுத்தப்படுவார்கள்.
என் எண்ணம் மட்டும் சின்னம் அல்ல. சின்னமே நான் தான். விவசாயத்தை காப்போம் என்ற வாதத்தை முன்வைத்து தேர்தலில் நிற்போம். இந்திய அரசியல், இந்தியாவை யார் ஆள்வார்கள் என்பதில் என்னைத் தேடிய மக்கள், தமிழகத்தை யார் ஆள்வார்கள் என்பதில் என்னை தவிர்த்துவிட்டு மக்கள் செல்ல மாட்டார்கள்.
மாற்று என வந்தவர்கள் எல்லோரும் திமுக, பாஜக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஏமாற்றியது தான் மிச்சம். திமுக - அதிமுகவிற்கு என்ன வேறுபாடு? பாஜக காங்கிரஸ் கட்சிக்கு என்ன வேறுபாடு. எதில் இருந்து மாற்று? எல்லா கட்சிகளும் ஒன்றுதான்.
தமிழர்களுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக இந்த நான்கு கட்சிகளும் எதிரிகள்தான். நாம் தமிழர் கட்சி இதுவரை ஆட்சிக்கு வரவில்லை ஆனாலும் நம்மை விமர்சிக்கிறார்கள் என்றால் எங்கே நாம் ஆட்சிக்கு வந்து விடுவோமோ என்கிற பயம்.
ஆயிரக்கணக்கான கோடி பணத்தை தாண்டி, சாராயத்தை தாண்டி, சாதி மதத்தை தாண்டி , இந்திய பிரதமர் யார் என்று தேர்ந்தெடுக்கும் இடத்தில் நமது சின்னத்தை தேடித்தேடி கண்டுபிடித்து வாக்களித்திருக்கிறார்கள் மக்கள். தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலே தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருப்பது மானத் தமிழ் மக்களின் மதிப்பு மிக்க வாக்குகளால்தான்.
கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா என்று கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. தேர்தல்களில் தோற்றுப்போனாலும் கூட்டணிக்கு சமரசம் இல்லை. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம்.
இம்முறையும் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டி. ஆண்களுக்கு 117 இடங்களும், பெண்களுக்கு 117 இடங்களும் வழங்கப்படும். இதில் 135 இடங்களில் இளைஞர்கள் போட்டியிடுவார்கள். மற்றவர்களுக்கு அரசியல் கட்சி, தேர்தல் அரசியல். நமக்கு போர். இனமானப் போர். நிலம் காக்கும் போர். நான் முன்வைக்கும் அரசியலை ஒருவராலும் மறைக்க முடியாது.
நம் இலக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது! நம் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது !
நம் பயணம் மிகச்சரியானது! தூரம் மிகச்சற்று தூரத்தில் ! பாதையை குறைக்க வேண்டியதில்லை.. மாறாக நம் கால்களை உறுதிப்படுத்துவோம் ! அடுத்தவன் தோள் மேலே ஏறி நின்று உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று நம் உண்மையான உயரத்தை காட்டுவது மேலானது" எனப் பேசியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications