பொள்ளாச்சி பாலியல் கொடுமை.. 48 சாட்சிகளிடம் நடந்த விசாரணை.. ஒருவர் கூட பிறழ்சாட்சி அளிக்கவில்லை!
கோவை: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட 48 சாட்சியங்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதுதொடர்பான சில வீடியோக்கள் வெளியாகிய போது, இளம்பெண்கள் பேசிய வார்த்தைகள், கதறிய ஆடியோ மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது.

சிபிஐ விசாரணை
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கை சிபிஐ எடுத்தது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன், வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், அருளானந்தம், அருண் குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பு
இவர்களின் மீது பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
அரசு தரப்பில் கோரிக்கை
இதன் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி நந்தினி தேவி, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். அதேபோல் அரசு தரப்பில், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பிறழ்சாட்சியே இல்லை
இந்த வழக்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது சாட்சியங்கள் தான். மொத்தமாக பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக 48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைவரும் தாமாக முன் வந்து சாட்சியம் அளித்த நிலையில், ஒருவர் கூட பிறழ்சாட்சி ஆகவில்லை. குற்றப்பத்திரிகையில் என்ன இருந்ததோ, அதனை சாட்சியங்கள் நீதிமன்றத்திலும் கூறி இருக்கின்றனர்.
டிஜிட்டல் ஆதாரங்கள்
அதேபோல் டிஜிட்டல் ஆதாரங்களும் இந்த வழக்கில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதனால் அழிக்கப்பட்ட வீடியோ, ஆடியோ ஆதாரங்களை மீட்டெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications