“யார் சொல்லி வந்தீங்க?”.. சீறிய அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி.. கறாராக டீல் செய்த அதிகாரிகள்!
மாநகராட்சி அதிகாரிகளுடன் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி வாக்குவாதம் செய்தார்.
கோவை : அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமிக்கு சொந்தமாக கோவையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்து வரி செலுத்தாததால் கேசி பழனிசாமிக்கு சொந்தமான காம்ப்ளக்ஸில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார். எனினும், தான் அதிமுக தொண்டர்களைத் திரட்டி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருப்பதாகக் கூறி வருகிறார் கேசி பழனிசாமி.
அதிமுகவில் ஈபிஎஸ் - ஒபிஎஸ் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பினரும், கேசி பழனிசாமியை தங்கள் பக்கம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், கேசிபி இருவருக்கும் பிடிகொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்
கோவை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் வரி உள்ள வரிகளை வசூல் செய்யும் பணிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. வரி செலுத்தாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வரி பாக்கி
இந்நிலையில் கோவை அரசு கல்லூரி எதிரே உள்ள சேரன் டவர் வணிக வளாக கட்டிடத்தில் உள்ள 3 கடைகள் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடம் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமிக்கு சொந்தமானது.

கேசிபி வாக்குவாதம்
1 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வரி பாக்கி உள்ளதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சேரன் டவரில் உள்ள 3 கடைகளையும் பூட்டி சீல் வைக்க முடிவு செய்து அங்கு வந்தனர். அதிகாரிகள் சீல் வைக்க வந்த தகவலை அறிந்து அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கறார்
கேசி பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதிலும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூல் செய்து தமிழ்நாட்டிலேயே சொத்து வரி வசூலில் கோவை மாநகராட்சி முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications