மனசுக்குள்ளே ஓணம் வந்தல்லோ, வந்தல்லோ.. கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களிலும் உற்சாகம்
கோவை: கேரளாவில் ஓணம் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அண்டை மாநிலமான தமிழகத்திலும், மலையாள மொழி பேசும் மக்கள், பல்வேறு கோயில்களில் குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.
கேரள மக்களின் முக்கிய பண்டிகையாக திகழும் ஓணம் பண்டிகை, ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் இந்த பண்டிகை, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால், மலையாள மொழி பேசும் மக்கள் வீடுகளிலேயே இந்தப் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்
களைகட்டிய ஓணம் பண்டிகை
தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி அஸ்தம் நட்சத்திரம் அன்று முதல் ஓணம் பண்டிகை தொடங்கியது. மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில், 10 நாட்களும், பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலும், கோயில்களிலும், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விதவிதமான அத்தப்பூ கோலமிட்டு திருவோண பண்டிகையை வரவேற்றனர்.
கோவையில் ஓணம் கொண்டாட்டம்
ஓணம் பண்டிகை கேரளாவில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்திலும் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள மலையாள மொழிபேசும் மக்கள், ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில், உறவினர்கள், நண்பர்கள் என குடும்பத்தினர் உற்சாகமாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலில், ஓணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், மலையாள மொழிபேசும் மக்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியில் ஓணம்
கேரளா மாநிலத்தின் அருகாமையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம், கேரளாவுடன் இணைந்திருந்த காலத்திலும் மட்டுமின்றி, தற்போதும் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் இங்கு வாழ்த்து வருகின்றனர். இங்குள்ள கேரள மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி, வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
கோவில்களில் வழிபாடு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், பெண் பக்தர்கள் அத்தப்பூ கோலிமிட்டு, கேரள பாரம்பரிய ஆடை அணிந்து வழிபாடு நடத்தினர். பள்ளி மாணவிகள் ஆடல்- பாடலுடன் ஓணம் பண்டிகையை உற்சாமாகக் கொண்டாடினர். இதேபோல், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.