அடடே...கோயமுத்தூர், கன்னியாகுமரிக்கு... வரும் ஆகஸ்ட் 31ல் விடுமுறையாம்!!
கோயமுத்தூர்: வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயமுத்தூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தையொட்டி கோயமுத்தூர் இருப்பதாலும், அங்கு அதிகளவில் மலையாளிகள் வசிப்பதாலும் இந்த முடிவை மாவட்டக் கலெக்டர் ராசாமணி எடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பத்து நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த 22ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் மலையாளிகளால் இந்தப் பண்டிகை மிகவும் வரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக மலையாளிகள் சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
திருவோணம் நாளில் மகாபலி தங்களது வீடுகளுக்கு வருவதாக கேரள மக்கள் நம்புகின்றனர். தமிழகத்தில் எப்படி தீபாவளி கொண்டாடப்படுகிறதோ அதேபோல், கேரளாவில் ஓணம் கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, பல வகைகளில் உணவுகள் தயாரித்து மகாபலிக்கு படைத்து கொண்டாடுகின்றனர். பத்து நாட்கள் வீட்டுக்கு முன்பு பூக்கோலம் போட்டு மகாபலியை வரவேற்கின்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கோயமுத்தூர் மாவட்டக் கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார்.
கோயமுத்தூரில் விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பதில் செப்டம்பர் 12ஆம் தேதி பணி நாளாக கருதப்படும். ஓணம் பண்டிகையை தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் ராசாமணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.