கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்.. மேலும் ஒருவர் மரணம்.. ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு!
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார். வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்கள் 6 பேர் இந்த ஒரே மாதத்தில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு லிங்க சிவனை வழிபடுவதற்காக 7 மலைகளைக் கடந்து பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 மலைகளிலும் மாறுபட்ட காலநிலை இருந்து வருவதால் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறை அனுமதி தந்து வருகிறது.

தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அடுத்தடுத்து பக்தர்கள் மரணம் அடைந்தனர். ஹைதராபாத் டாக்டர் சுப்பாராவ், சேலம் தியாகராஜன், தேனி பாண்டியன் ஆகியோர் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போதும் திரும்பி வந்த போதும் மரணம் அடைந்தனர்.
இதனால் வெள்ளியங்கிரி மலை ஏற்றம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கைகளை விடுத்து வந்தனர். பொதுவாக இணை நோய் உள்ளவர்கள், உடல் பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏற்றத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த ரகுராம் என்ற பக்தர்கள் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறும் போது மூச்சுத் திணறலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் ரகுராம், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்ய சென்ற போது இத்துயரம் நிகழ்ந்தது. வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது ஒரே மாதத்தில் மொத்தம் 6 பக்தர்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு காலத்துக்குப் பின்னர் வெள்ளியங்கிரி மலை ஏறுவதால் ஆண்டுக்கு 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் மரணம் அடைவது தொடர் நிகழ்வாகிவிட்டதாகவும் வனத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பொதுவாக உடல் நலன் பாதிப்பு இருந்தால் இத்தகைய மலையேற்றங்களைத் தவிர்ப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications