நீட் தேர்வு மாணவர்களா.. இல்லை திருடர்களா? இவ்வளவு கெடுபிடி கூடாது! பெற்றோர்கள் ஆவேசம்
கோயம்புத்தூர்: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், அவர்களை திருடர்களை போன்று பாவித்து ஓவர் கெடுபிடிகளை காட்ட வேண்டாம் எனவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று தொடங்கியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு, மாலை 5.20 வரை நடத்தப்படுகிறது. ஏற்கெனவே தேர்வுக்கான சில அறிவுறுத்தல்களை தேசிய தேர்வு முகமை வழங்கியிருக்கிறது.

அதாவது, தேர்வு மையங்களுக்குள் பேப்பர் துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், தோள்பை, பிரேஸ்லெட், தொலைபேசி, மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்ஸ், வாட்ச், ஆபரணங்கள், உணவு பொருள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடங்கி முதல் ஒரு மணிநேரம் மற்றும் கடைசி அரை மணிநேரம் மாணவர்கள் கழிவறை செல்ல அனுமதி கிடையாது. பாரம்பரிய மற்றும் கலாசார, மதம் சார்ந்த ஆடை உடுத்தி வருவோர், சோதனைகளுக்கு வசதியாக பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். மாணவர்கள் சாதாரண செருப்பு, குறைந்த உயரம் உள்ள காலணிகள் அணிந்து வர அனுமதி உண்டு. ஷூ அணிந்து வர அனுமதி கிடையாது. தேர்வு முடியும் முன்பே விடைத்தாளை ஒப்படைத்துவிட்டு வெளியே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தனது மகளை தேர்வு எழுத அனுப்பிவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை,
"மாணவர்களுக்கு மிகுந்த கெடுபிடி காட்டப்படுகிறது. இந்த கறார் தன்மையை தேர்தலில் காட்டியிருக்க வேண்டும். குழந்தைகளை திருடர்களை போல நடத்துகிறீர்கள். குழந்தைகள் படித்து முன்னேற தான் வந்திருக்கிறார்கள். திருட்டுத்தனம் செய்ய அல்ல. கம்மல் போடக்கூடாது, இந்த மாதிரித்தான் உடை உடுத்த வேண்டும் என்பதெல்லாம் மிகுந்த கெடுபிடியாக இருக்கிறது.
நீட் என்பதே தேவையில்லாத ஒன்றுதான். இருப்பினும் நீட் விலக்கு வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க வரும் குழந்தைகளை திருடர்களை போல பாவிக்காதீர்கள்" என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெற்றோர் கூறுகையில், "என்னுடைய மகள் முதல் முறையாக நீட் தேர்வு எழுதுகிறார். முறைகேட்டை தடுக்கிறோம் என ஓவராக கறார் கட்டுகிறார்கள். 2 மணிக்குதான் தேர்வு என்றாலும், 11.30 மணிக்கே வர சொல்லிவிடுகிறார்கள். உள்ளே செல்லும் மாணவர்கள் மாலை 5.30க்குதான் வெளியே வருகிறார்கள். இடைபட்ட நேரத்தில் அவர்களுக்கு உணவு ஏதும் இருக்காது.
கண்ணாடி பாட்டில் அல்லது, கண்ணாடி போன்ற தெளிவான பாட்டிலில் மட்டுமே தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. உள்ளே அவர்கள் தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என தெரிவித்திருக்கிறார்.
நீட் தொடங்கியதிலிருந்து அதற்கான கெடுபிடிகள் குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. குறிப்பாக தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பாதிப்படைந்த மாணவி, டையப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications