கோவை புது பேருந்து நிலையம்.. பேருக்குதான் ஹைடெக்! பஸ் நிக்காது, லைட் எரியாது, கழிவறை பக்கம் "ம்ஹூம்"
கோவை: கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் கழிவறை துர்நாற்றம் வீசுவதோடு, விளக்குகளும் எரியாததால் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோவை மாவட்டத்துக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் கல்வி மற்றும் வேலைக்காக வந்து செல்கின்றனர். கோவையில் முக்கிய பேருந்து நிலையமாக காந்திபுரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, நீலகிரி மற்றும் கர்நாடகத்துக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், சாயிபாபா கோவில் அருகே புதிய பேருந்து நிலையம் 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 3 ஏக்கர் பரப்பளவில் ரூ. 7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்பேருந்து நிலையத்தை, மேட்டுப்பாளையம், நீலகிரி, கர்நாடகா செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளும், சுமார் 150க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் சோலார் மேற்கூரை, லிப்ட், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை என 15 ஆண்டுகளுக்கு முன்பே ஹைடெக் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் இந்த வசதிகள் எதுவும் தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லை.

பேருந்து நிலையத்தில் உள்ள 4 கழிவறைகள் மிகவும் மோசமாக உள்ளது. திறந்தவெளியிலேயே மலம் கழிப்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இப்பேருந்து நிலையத்தின் மேல்தளத்தில் பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால், அங்குள்ள விளக்குகள் எரியாததால் அப்பகுதிக்குச் செல்ல முடியாமல் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். முறையான பராமரிப்பில்லாததால் பயணிகள் விட்டுச் செல்லும் குப்பைக்கூளமாக இப்பேருந்து நிலையம் மாறியுள்ளது.

மேலும், காந்திபுரத்தில் இருந்து வரும் உள்ளூர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாகவும் மாறியுள்ளது.
பயணிகள் பலரும் பார்க்கிங் வசதிக்காக மட்டுமே இப்பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்த வேண்டிய பேருந்து நிலையம், தற்போது வெறும் நூற்றுக்கணக்கான மக்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில்தான் உள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்காக 2 தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தும் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.கடந்த வாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வந்தபோது சம்பிரதாயத்துக்காக மட்டும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது, மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பது குறித்து போக்குவரத்து துறை துணை ஆணையர் மூலம் விசாரணை நடத்துவதற்கான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும், பேருந்துகள் முறையாக வராதது குறித்து கேட்டபோது, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பேருந்து நிலையத்தில் கூடுதல் தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவுள்ளோம். திறந்தவெளி மலம் கழிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா வைத்து பராமரிப்பு பணிகள் கண்காணிக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications