சவுக்கு சங்கர் மீது போலீஸ் தாக்குதல்.. எலும்பு முறிந்தது: வக்கீல் பேட்டி!
கோவை: சவுக்கு சங்கரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் ஜெயிலில் பத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அடித்துள்ளதாகவும் கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின் அவரது வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சவுக்கு சங்கர் சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா புகாரின் பேரில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைபர் கிரைம் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேனியில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் கோவை அழைத்து வந்தனர். அப்போது காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியது. லேசான காயங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர்.
இந்த நிலையில் இன்று சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் சந்தித்த அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், கோவை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் என நீதிபதியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. கை கால் நன்றாக இருந்தது. சிசிடிவி காட்சியிலும் இது தெரியும்.
தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் தடிப்பு தடிப்பாக ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன. சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார்.
கை உடைந்து விடக்கூடாது என பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி அடித்துள்ளனர். ஆனாலும், அடி பலமாக விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீக்கத்தை குறைப்பதற்காக ஆயின்மெண்ட் போட்டு, வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்துள்ளனர். வலி நிவாரணி அதிகம் கொடுத்தால் அவரது கிட்னி பாதிக்கப்பட உள்ளது.
இன்று வழக்கறிஞர்கள் குழுவினர் சங்கரை சந்திக்காமல் இருந்திருந்தால் அவர் வழுக்கி விழுந்ததாகவோ அல்லது வேறு விதமாகவோ சிறை அதிகாரிகள் இன்று இரவோ, நாளையோ அறிக்கை வெளியிட்டிருப்பார்கள். இதற்கென்றே ஒரு முறை வைத்திருக்கிறார்கள். எனவே தான் இன்று அவரைச் சந்தித்ததுமே இது பற்றி மனு அளித்துள்ளோம்.
கோவை மத்திய சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது. சவுக்கு சங்கரை சிறை வளாகத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து சக கைதி ஒருவரே சாட்சியம் அளிப்பார்.
சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை சிறையில் ஆபத்து உள்ளது. நீதிபதி எங்கள் மனுவை பரிசீலனை செய்து கோவை மத்திய சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அவர் உடல்நிலையை பரிசோதித்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். திரும்பவும் அவரை ஜெயிலில் அடைத்துக் கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரின் வழக்கறிஞரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications