பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு... சக கைதிகள் எதிர்ப்பு
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு சக கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் சில அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருநாவுக்கரசு மட்டுமின்றி சதீஷ், சபரி ராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டாசில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். இந்த நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருக்கும் அறையில் 3 பேரையும் அடைக்க கோரி சக கைதிகள் போராட்டம் நடத்தினர்.
இதனை அடுத்து, தாக்குதல் சம்பவத்தை தவிர்க்க, சிறைக்காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, சக கைதிகளை சமாதானப்படுத்தினர். விரைவில் மூன்று கைதிகளும் வேறு சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications