கோவை புதிய மேயர் யார் என்பதை விடுங்க.. யார் கை காட்டுபவர் மேயர்? பரபரக்கும் பவர் பாலிடிக்ஸ்
கோவை: வாடகை வீடு, மிடில் கிளாஸ் வாழ்க்கை, பாரம்பரிய திமுக குடும்பம் என்று எளிய பின்னணியில் இருந்த கல்பனா ஆனந்தகுமார் கோவை மாநகராட்சி மேயரானார். குறுகிய காலத்திலேயே சொந்தக் கட்சி கவுன்சிலர்கள் தொடங்கி பக்கத்து வீட்டுக்காரர் வரை எல்லோரிடமும் மோதல் போக்கில் ஈடுபட்டார். கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடி என்பது போல அடுத்தடுத்த புகார்களால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து திமுக தலைமையின் உத்தரவுப்படி கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்தார். கல்பனா மேயர் பதவியை ராஜினாமா செய்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இப்போது, கோவை மாநகராட்சி மேயர் தேர்வுக்காக நடக்கும் பவர் பாலிடிக்ஸால் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

மேயர் பதவியை கைப்பற்ற கோவை கவுன்சிலர்களிடையே கடுமையான ரேஸ் நிலவுகிறது. சீனியர் அமைச்சர்கள் தீவிரமாக மூவ் செய்து வருகிறார்களாம். மண்டல தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை, நிலைக்குழு தலைவர்கள் சாந்திமுருகன், கல்பனா, பேபி சுதா, அம்பிகா, ரங்கநாயகி, சுபஶ்ரீ உள்ளிட்ட பலர் ரேஸில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மேயராக இருந்த கல்பனா, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர். இதனால் கல்பனா துறை அமைச்சராக இருந்த கே.என். நேருவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இது பவர் பாலிடிக்ஸ் மோதலாகவும் மாறியது.
செந்தில் பாலாஜி சிபாரிசு: கல்பனா, செந்தில் பாலாஜி ஆதரவால் மேயர் பதவிக்கு வந்தவர். இதனால்தான் உங்களை மதிக்கவில்லை என நேருவிடம் சிலர் கொளுத்திப் போட்டனராம். நேருவின் சொந்த துறை என்பதால் புதிய மேயர் அவரது விருப்பப்படி இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். இதன் காரணமாக நேருவின் சிபாரிசுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்களாம். தற்போது மேயராக உள்ளவருக்கு 2026 தேர்தல் களப்பணி முக்கிய அஸைன்மென்டாக இருக்கும். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், சமீபத்தில் திமுக ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவிலும் நேரு இருப்பதால், மேயர் தேர்வில் அவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறது அறிவாலய வட்டாரம்.
கோவை யார் வசம்: என்னதான் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் கோவை அரசியலை கெட்டியாக பிடித்து வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் கைகாட்டிய கணபதி ராஜ்குமார்தான் கோவை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜி எப்போது சிறையில் இருந்து வந்தாலும் கோவை பொறுப்பு அவர் வசம் தான் செல்லும். காரணம் அவர் வெளியில் இருந்போதே 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளுக்கு அஸ்திவாரம் போட்டு வைத்திருந்தார்.
மீண்டும் ஆதிக்கம்?: 2021 சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் படுதோல்வியை சந்தித்த திமுகவை, 2022 உள்ளாட்சி தேர்தலில் பிரமாண்ட வெற்றியை பெற வைத்தவர் என்பதால் அவரின் கருத்து முக்கியமானதாக இருக்கும். மேலும் கல்பனா செந்தில் பாலாஜியின் சாய்ஸில் வந்தவர். அவரை பதவியில் இருந்த இறக்கியது ஒருவகையில் செந்தில் பாலாஜிக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே இந்தமுறையும் அவரின் பரிந்துரைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
சிபாரிசுகள்: மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதி பொறுப்பாளராக இருந்த டி.ஆர்.பி ராஜா, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை தொழில்நகரம் என்பதாலும், அவர் தொழில்துறை அமைச்சர் என்பதாலும் பொறுப்பு அமைச்சராக அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து திமுகவை பிரமாண்ட வெற்றி பெற வைத்ததால் ராஜா, திமுக தலைமையின் குட்புக்கில் உள்ளார். இதன் காரணமாக சிலர் அவர் மூலமாகவும் காய் நகர்த்தி வருகிறார்கள்.
பரமபதம்: இதுதவிர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோரின் நெருங்கிய உறவினர்கள் மூலமாகவும் கோவை மேயர் பதவிக்காக முயற்சி செய்து வருகிறார்களாம். கோவை மேயராக யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை விட, யார் கைகாட்டுபவர் மேயராக போகிறார் என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் 2026 சட்டசபை தேர்தல் வரை கோவை அரசியலும் அவர்களின் கன்ட்ரோலில் தான் இருக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications