வீடு வீடாக தனக்கு ஓட்டுக் கேட்கும் கர்ப்பிணி பெண்! கோவையில் களைகட்டிய தேர்தல் திருவிழா!
கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்னும் அறிவிப்பே வராத நிலையில், கோவையில் ஒரு கட்சி பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான அரசியல் ஆடுபுலி ஆட்டத்தால் கோவையில் தேர்தல் களம் அனல் பறப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் தன் பங்குக்கு களமாடத் தொடங்கியிருப்பதால் இப்போதே தேர்தல் திருவிழா கோலம் பூண்டுள்ளது கோவை மாநகரம்.
உ.பி: முதல் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்- அகிலேஷ் ஆரூடம்
மக்கள் நீதி மய்யம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதற்குள் கோவை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட கமல்ஹாசன், தேர்தல் பிரச்சார பணிகளையும் தொடங்கிவிட்டார். அந்த வகையில் ம.நீ.ம. நிர்வாகிகள் வீதி வீதியாக வாக்குகள் சேகரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
கர்ப்பிணி பெண்
இதில் என்ன விஷேஷம் என்றால், 6 மாத கால கர்ப்பிணி பெண் ஒருவரும் கவுன்சிலர் பதவியிடத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை பி.என்.புதூர் பகுதியில் அதாவது 41-வது வார்டில் போட்டியிடும் அந்த கர்ப்பிணி பெண் வேட்பாளரான நந்தினியிடம் நாம் இது குறித்து பேசினோம். அப்போது கூறிய அவர், ''எனது கணவர் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாள் முதல் அக்கட்சியில் உறுப்பினராக இருக்கிறார்.''
பொதுவாழ்க்கை
''அவருடைய விருப்பத்தின் பேரில் தான் நான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறேன். எனது வார்டில் மொத்தம் 13,000 வாக்குகள் உள்ளன. பொதுவாக கொரோனா காலம் என்பதால் இது போன்ற சூழலில் வெளியே வரவே பலரும் அஞ்சுவார்கள். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது என்பதால் நான் தைரியமாக வெளியே செல்கிறேன். நான் செய்யவிருப்பதை கூறி வாக்குகள் சேகரிப்பேன்.'' எனக் கூறி முடித்தார் நந்தினி.
நேர்காணல்கள்
இதனிடையே திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இப்போது தான் நேர்காணல்கள் முடிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் நாம் தமிழர் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் எனத் தெரிகிறது.