குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியா? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன பதில் என்ன தெரியுமா
கோவை: குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதுவை மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழிசை சவுந்தரராஜன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொரோனா இல்லாத நாடாக இன்று இந்திய உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தடுப்பூசி. இந்தியாவில் இதுவரை 180 கோடி டோஸ் தடுப்பூசி போட்டதால் தான் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு உள்ளது. இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் மாஸ்க் கட்டாய அணிய வேண்டும்

ஆளுநர் உரை
தெலங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. அதை நான் பெரிதுபடுத்தவில்லை. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் நான் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வது கூட தவறாக முன்னிறுத்தப்படுகிறது.

சிறு விஷங்களும் பெரிதாக்குகின்றனர்
சில மாநிலங்களில் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது. என்னைப் பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுபவர்கள். மேலும் மார்ச் 27ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமானச் சேவை தொடங்க உள்ளது. பல்வேறு முயற்சிக்குப் பின் இது கிடைத்துள்ளது இதற்குப் பிரதமருக்கும் ,விமான துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

புதுச்சேரி விமானச் சேவை
புதுச்சேரி வளர்ச்சிக்கு விமானச் சேவை முக்கியம். இதன் மூலம் புதுச்சேரி சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். மேலும், புதுச்சேரி ஒட்டியுள்ள கடலூர் ,நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிக்கரமாக அமையும். இந்த விமானச் சேவை புதுச்சேரி - பெங்களூர் இடையே இருக்கும் இருக்கும். முதல் பயணியாக அதில் நான் பயணிக்க உள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழிசை பதில்
அப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறதே என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இது குறித்து எவ்வித கருத்தும் சொல்ல முடியாது என்றும் நான் ஒரு சாதாரண குடிமகள் தான் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது குறித்தும் கருத்து கூற விரும்பவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் பாஜக முன்னிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications