கோவையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பஞ்சாப் சிங்! உள்ளாட்சித் தேர்தல் திருவிழா விறு விறு!
கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சிங் ஒருவர் சுயேச்சையாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் கோவைக்கு குடிபெயர்ந்த சிங் குடும்பத்தினர், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
பன்முகங்கள் கொண்ட வேட்பாளர்களால் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா விறு விறுப்படைந்துள்ளது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி தேர்தலில் 71-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பஞ்சாப்பை பூர்விகமாக கொண்ட டோனி சிங் என்பவர் போட்டியிடுகிறார். இவரது பூர்வீகம் பஞ்சாப் என்றாலும் கூட, டோனி சிங் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் கோவையில் தான். இதனால் சரளமாக தமிழ் பேசக் கூடிய இவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சமூகநலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் இளைஞர்களுக்கு உணவு வழங்கி கவனத்தை ஈர்த்தவர்.

சுயேச்சை வேட்பாளர்
இந்நிலையில் சுயேச்சையாக கோவையில் கவுன்சிலர் பதவியை குறி வைத்து களமிறங்கியுள்ள டோனி சிங்கிற்கு நடிகர்கள் பாக்யராஜ் மற்றும் நிழல்கள் ரவி ஆகிய இருவரும் வாக்குக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். டோனி சிங்கும் நிழல்கள் ரவியும் கோவையில் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. பெயரில் மட்டுமே சிங் இருப்பதாகவும் உள்ளத்தாலும் உணர்வாலும் அவர் தமிழர் எனக் கூறி நடிகர் பாக்யராஜ் வாக்கு சேகரித்தார்.

டோனி சிங்
கோவையில் டோனி சிங் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். டோனி சிங் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதை முதலில் வேடிக்கையாக பார்த்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் இப்போது அவருக்கு எதிராக தீவிர தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே டோனி சிங்கிற்கு ஆதரவாக கோவையில் வசிக்கக் கூடிய பஞ்சாப் சிங் சமூகத்தை சேர்ந்தவர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

வேட்டி சட்டை
தேர்தல் பிரச்சாரத்தின் போது தலையில் டர்பனும், வேட்டி சட்டையும் அணிந்தவாறு மக்களை சந்தித்து வருகிறார் டோனி சிங். டோனி சிங் போன்று பல சுவாரஸ்யமான வேட்பாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ளதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications