கோவை ரயில்கள் குறித்து காட்டுத் தீயாக பறந்த தகவல் .. அப்படியா விஷயம்.. கொதித்து போன மக்கள்
கோவை: ஆலப்புழா-சென்னை, திருவனந்தபுரம்-டெல்லி , குமரி- திப்ருகர், எர்ணாகுளம்- பாட்னா உள்பட கேரளாவில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 6 முக்கிய ரயில்களை கோவைக்கு பதிலாக போத்தனூர் வழியாக இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலால் கோவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் உள்ள ஊர் என்றால் அது கோவை தான். கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாகவும் இருக்கிறது. கோவையில் சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் என்றால் அதில் கணிசமானோர் வெளியூரில் இருந்து வந்தவர்கள். அதில் தென்மாவட்டத்தினர் அதிக அளவிலும், அதற்கு அடுத்து கேரளாவைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள்.

கோவை தற்போதைய நிலையில் சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பெரிய அளவில் வணிக நிறுவனங்களுடன் வளர்ந்து நிற்கிறது. சிறுகுறு தொழில்கள் அதிக அளவில் உள்ள நகரமான கோவையில், ஏராளமான வட இந்தியர்களும் வசிக்கிறார்கள்.. இதன் காரணமாக ஏராளமானோர் ரயில்களில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். கோவையில் இருந்து கணிசமான ரயில்கள் புறப்படும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக செல்லும் எல்லா ரயில்களுமே கோவைக்கு வந்து தான் போகின்றன.
தெற்கு ரயில்வேக்கு சென்னைக்கு அடுத்த படியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையம் என்றால் அது கோவை ரயில் நிலையம் தான்.. அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமான கோவைக்கு பெரிய அளவில் எந்த கட்டமைப்பும் மேம்படுத்தப்படவில்லை. கோவை கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்தது.
உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், மற்ற ஊர்களில் எல்லாம் பேருந்துகள் செல்லத்தான் பைப்பாஸ் போட்டிருப்பார்கள். கோவையில் மட்டும் ரயில்கள் செல்லவே பைப்பாஸ் போட்டார்கள். அதாவது கோவை ரயில் நிலையம் வராமல், கோவையின் புறநகர் பகுதியாக ஒரு காலத்தில் இருந்த போத்தனூரில் நின்றுவிட்டு அப்படியே கேரளாவுக்குள் ரயில்கள் சென்று வந்தன.
2004 முதல் 2006களில் ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலம் வேலை நடைபெற்ற காலத்தில் எல்லாம் இருகூரில் இந்த சிக்கல்கள் இருந்து வந்தது.
அதன் பிறகு மக்கள் பல நாட்கள் போராடினார்கள். அது எப்படி கோவை மாநகருக்குள் வராமல் கேரள ரயில்கள் செல்வது என்று மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். கடும் எதிர்ப்பு எழுந்த பின்னரே, கேரளா செல்லும் அனைத்து ரயில்களுமே கோவைக்குள் வந்து செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது வரை கோவை வழியாக கேரளா அல்லது கர்நாடகா செல்லும் எந்த ரயிலாக இருந்தாலும் கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வராமல் போகாது.
இப்படியான சூழலில், பழையபடி, அதாவது ஆலப்புழா-சென்னை விரைவு ரயில், திருவனந்தபுரம்-டெல்லி விரைவு ரயில், குமரி- திப்ருகர் (அசாம்) விவேக் விரைவு ரயில், எர்ணாகுளம்- பாட்னா விரைவு ரயில், கொச்சிவேலி-எஸ்வந்த்பூர் விரைவு ரயில், கொச்சுவேலி-ஹூப்ளி ரயில் ஆகிய 6 முக்கிய ரயில்கள் கோவை ரயில்நிலையத்திற்கு வராமல் போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு கோவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்படி கேரள ரயில்களை மாற்றி இயக்கினால், கோவை மாநகரத்தில் உள்ள தொழில்துறையினர், பிற மாநில தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் கோவையில் இருந்து டெல்லி செல்ல திருவனந்தபுரம்-டெல்லி ரயில் மட்டுமே உள்ள நிலையில், ரயில்களை கோவை வராமல் போத்தனூர் வழியாக இயக்கினால் அது வடமாநில தொழிலாளர்களை பாதிப்பதுடன் கோவை நகரின் வளர்ச்சியை பாதிக்கும் என்று எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட 6 ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் செல்லுமா அல்லது வழக்கம் போல் செல்லுமா என்பது குறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications