கோவை தடாகத்தில் பதறவைத்த உருவம்.. தலைதெறிக்க ஓடிய ஒற்றை காட்டு யானையின் அதிர்ச்சி வீடியோ
கோவை: கோவை தடாகம் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் சேர்ந்து சப்தம் எழுப்பி வனப் பகுதிக்குள் யானையை விரட்டினர். யானை தலைதெறிக்க ஓடிச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான தடாகம், தொண்டாமுத்தூர், அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

கோவை நகர்ப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி. வளம் நிறைந்த இந்த மலைத் தொடரில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. வனப் பகுதியில் இருந்து வெளியேறும் இந்த விலங்குகளால் கோவையில் மனித - விலங்கு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உணவு, குடிநீர் தேடி யானை, சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்டவை குடியிருப்புக்குள் புகுவது, தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் வனத் துறையினர் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது, வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் விலங்குகளை வனத்துக்குள் துரத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன. தடாகம், கணுவாய், மாங்கரை, ஆனைகட்டி, ஓணாப்பாளையம், தாளியூர், மருதமலை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள், மான்கள் என பல்வேறு வன விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக தடாகம், கெம்பனூர், விராலியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் விவசாய தோட்டங்களைச் சேதப்படுத்துவதுடன், தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் புண்ணாக்கு, தவிடு, ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்களைச் சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது. மேலும், இந்த யானைகள் வீட்டை உடைத்து உணவுப் பொருட்களைத் தேடுவதும் தொடர்ந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் சாதாரணமாக வெளியே செல்வதற்கு கூட அச்சமடைந்து உள்ளனர். வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து அப்பகுதிகளுக்குள் வரும் காட்டு யானைகளை அவ்வப்போது வனப் பகுதிகளுக்குள் விரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த ஒற்றைக் காட்டு யானை இரவில் அப்பகுதியில் சுற்றி திரிந்து உள்ளது. அதிகாலையில் அப்பகுதி பொதுமக்கள் அந்த யானையை கண்டதும் அதிர்ச்சியடைந்து சப்தம் எழுப்பி விரட்டி உள்ளனர். பொதுமக்கள் சேர்த்து சப்தம் எழுப்பியதில் அந்த சத்தத்தை கேட்டு ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள தெருக்களில் தலை தெறிக்க ஓடியது.
இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறும் யானைகளை உரிய ரோந்துப் பணிகள் மேற்கொண்டு வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications