குதிச்சிடுடா கைபுள்ள.. கோவையில் அவசரப்பட்ட குமாருக்கு அசிங்கமா போச்சு.. மொரட்டு சம்பவம்
கோவை: அதிகாலை 1 மணியளவில் கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் போலீஸ் ஜீப் வந்ததை கண்ட ரவுடி ஒருவர்,திடீரென போலீசிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதனால் அவரது இரண்டு கால்களும் முறிந்து போனது.. தரையில் விழுந்து கிடந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்..
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த 30 வயதாகும் சுஜிமோகன் பிரபல ரவுடியாவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி மோதல் உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து சுஜிமோகன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தநிலையில் சுஜிமோகன், கோவை மயிலம்பட்டி கென்னடி வீதியை சேர்ந்த 41 வயதாகும் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் சுஜி மோகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கோவை கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலத்தில் சுஜி மோகன் நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் வாகனம் சுழல் விளக்குடன் வேகமாக வந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த சுஜி மோகன், தன்னைத்தான் பிடிக்க வருகிறார்கள் என்று கருதி மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் 2 கால்களும் முறிந்த நிலையில் நீண்ட நேரமாக கிடந்துள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுஜிமோகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். வடிவேலு சினிமா படங்களில் வருவது போல், குதிச்சிடுடா கைப்புள்ள என்பது ரவுடி ஒருவர் போலீசுக்கு பயந்து குதித்து, கடைசியில் இரண்டு கால்களையும் இழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications