காற்றாலை மோசடி வழக்கு- நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை!
கோவை: காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது கோவை நீதிமன்றம்.
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கியவர் நடிகை சரிதா நாயர். கோவையில் ஐ.சி.எம்.எல். என்ற நிறுவனம் அமைத்து காற்றாலைகள் அமைத்து தருவதாக பணம் வசூல் செய்தார்.
ஆனால் அப்படி பணம் வசூலித்தவர்களுக்கு காற்றாலைகளை அமைத்து தராமல் மோசடி செய்திருக்கிறார் சரிதா நாயர். அவரிடம் ரூ28 லட்சம் ஏமாந்த தியாகராஜன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் சரிதா நாயர், அவரது மாஜி கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் ரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு கோவை 6வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் இன்று சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளிகள் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ10,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே 2016-ல் சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரளா நீதிமன்றம் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.