சூடுபிடிக்கும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு.. சயானிடம் சிபிசிஐடி போலீசார் துருவித் துருவி விசாரணை!
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ளது. அவர் இறந்த பிறகு ஏப்ரல் 23, 2017 அன்று கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. மேலும் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் உயிரிழந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஏராளமான சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், சம்பவத்தன்று நடந்த தொலைபேசி அழைப்பு பதிவுகள் குறித்து சிபிசிஐடி போலீசார் பெற்று விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட 12 பேர் உள்ளிட்ட சிலரின் தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜரானார். கடந்த வாரம் ஆஜராக சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று ஆஜராகி உள்ளார் சயான். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி போலீசார் முன்பாக ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று சயான் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications