நாட்டை ஆள தகுதி வேணும்ங்க.. ரஜினிகாந்த் குறித்து சீமான் கடும் விமர்சனம்
கோவை: திரையில் நடிப்பது மட்டும் நாட்டை ஆள தகுதியை தராது என ரஜினி குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, நடிகர் ரஜினிகாந்த் குறித்த விமர்சனத்தை சீமான் தொடர்ந்து முன்வைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை ஆள அளப்பரிய தியாகமும், அர்ப்பணிப்பும் தேவை, இனம் குறித்தும் தகவல்கள் தெரிய வேண்டும் என்றார்.
சம எதிரி
மேலும், ஆட்சியில் இருந்தபோது திமுக கிராம சபை நடத்தி இருந்தால் கிராமங்கள் முன்னேறியிருக்கும் என்று விமர்சனம் செய்த சீமான் அனைத்து கட்சிகளையும் சம எதிரியாக பார்த்து தான் தேர்தலில் போட்டியிடுவோம் எனத் தெரிவித்தார்.
மக்கள் போட்ட பிச்சை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சர் கருத்துக்கு பதிலளித்த அவர், செல்லூர் ராஜூ அமைச்சராக இருப்பது மக்கள் போட்ட பிச்சை எனக் கூறினார்.
ரஜினி குறித்து விமர்சனம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பேசிய சீமான், ரஜினிகாந்த் தலைவர் என்றால், அப்போ பிரபாகரன், காமராஜர், கக்கன் உள்ளிட்டோர் எல்லாம் என்ன சமூக விரோதிகளா, நகர்புற நக்சல்களா, இல்லை ஆன்டி இந்தியனா என்று கேள்வி எழுப்பினார்.
திருத்துவது கஷ்டம்
மேலும், தலைவர்னா யாரென தெரியாத கூட்டம் தான், திரையரங்குகளில் தலைவர்களை தேடுகின்றனர். இந்த கூட்டத்தை திருத்துவது கஷ்டம். தொலைக்காட்சிகளில் கூட ரஜினிகாந்த் என்று கூறுவது கிடையாது தலைவர், தலைவர்னு தான் சொல்றாங்க. சினிமாவில் நடிப்பவன் நடிகன் தானே தவிர, தலைவரல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது.