Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!
கோவை: தவெக தலைவர் விஜய் தனது மாநாடுகளில் "தனித்துப் போட்டி" மற்றும் "மக்களை மட்டுமே நம்புகிறேன்" என்று கூறி வருவதைச் சாடிய சீமான், திரைமறைவில் நடக்கும் அரசியல் நகர்வுகளைப் பட்டியலிட்டார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிமிக்கப் பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், "விஜய் தன்னை ஒரு மாபெரும் கதாநாயகனாகக் காட்டிக் கொள்கிறார். தம்பி விஜய் கதாநாயகன் என்றார். 150 பேரை ஒட்டுப்போட்டு ஒரு சட்டை தைத்தது போல, 10 வீட்டில் கையேந்தி சாப்பாட்டை சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்குனது போல, லெட்டர் பேடு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார்.

இரவோடு இரவாக சிறிய மற்றும் 'லெட்டர் பேடு' கட்சிகளை ஒருங்கிணைத்து, சுமார் 150 அமைப்புகளுக்குச் சீட்டுக் கொடுத்துத் தன் பக்கம் இழுத்துள்ளார்.
"ஸ்டாலின் 22 கட்சிகளோடும், எடப்பாடி 10 கட்சிகளோடும் வெளிப்படையாகக் கூட்டணி வைத்துள்ளனர். ஆனால், யாரோடும் கூட்டணி இல்லை என்று சொல்லும் விஜய்தான் உண்மையில் 150-க்கும் மேற்பட்ட சிறிய அமைப்புகளுடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளார்.
ஒரு தலைவன் என்பவன் தன் மண்ணையும் மக்களையும் மட்டுமே முழுமையாக நம்ப வேண்டும். எங்களைப் பாருங்கள், நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக யாரையும் சார்ந்து நிற்காமல், தனித்து நின்று மக்களை மட்டுமே நம்பிக் களத்தில் இருக்கிறோம்.
எங்களை நீங்கள் பலமுறை தோற்கடித்திருக்கலாம். ஆனால், நாங்கள் தோற்றுப்போன பிள்ளைகளாக முடங்கிக் கிடக்கவில்லை. இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மீண்டும் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறோம். எங்களை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.
தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் புழக்கத்தில் இருக்கும் 'இலவச அரசியல்' கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது இலக்கு என்பதைச் சீமான் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில் எனது ஆட்சியில் 'இலவசம்' என்ற சொல்லே அகராதியில் இருக்காது. மக்களைப் பிச்சைக்காரர்களாக மாற்றும் இலவசத் திட்டங்களை ஒழிப்பேன். அதற்குப் பதிலாக தரமான கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பை உரிமையாக்குவேன்."
பைந்தமிழர் நாட்டில் 'பசி' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. நானே நேரடியாக விவசாயத்தில் இறங்கி, விவசாயத்தைப் புரட்சிகரமான தொழிலாக மாற்றி, ஒவ்வொரு தமிழனின் பசியையும் போக்குவேன்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
சீமானின் இந்த திடீர் விமர்சனத்திற்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வாக்கு வங்கிப் போட்டி: நாம் தமிழர் கட்சியின் இளைஞர் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களை, விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' குறிவைப்பதாகச் சீமான் கருதுகிறார்.
கொங்கு மண்டல அரசியல்: தொண்டாமுத்தூர் போன்ற அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் பகுதியில் நின்று கொண்டு, திராவிடக் கட்சிகள் மற்றும் புதிய வரவான விஜய் ஆகிய இரு தரப்பையும் ஒரே நேரத்தில் சீமான் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன.
விஜய்யின் இந்த "150 கட்சிகள் கூட்டணி" குறித்த தகவல் உண்மையா அல்லது சீமானின் அரசியல் யூகமா என்பது வரும் நாட்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முழுமை பெறும்போது தெளிவாகும்.












Click it and Unblock the Notifications