"நான் பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை.." கோவை ஏர்போர்ட்டில் உடைத்து பேசிய செங்கோட்டையன்
கோவை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்திருக்கும் சூழலில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று திடீரென டெல்லி செல்கிறார். இதற்கிடையே கோவை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் சில முக்கிய கருத்துகளைக் கூறினார். ராமரை தரிசனம் செய்யவே ஹரித்துவார் செல்வதாகக் கூறிய செங்கோட்டையன், இந்தப் பயணத்தில் வேறு யாரையும் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. இந்த முறை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியிருக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனச் சொல்லி எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருக்கிறார்.

அதிமுக
அதாவது அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பல்வேறு தரப்பினரும் பிரிந்து சென்றிருக்கும் சூழலில், அவர்கள் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பதே செங்கோட்டையனின் கோரிக்கை. அப்போது தான் திமுகவை வீழ்த்தி அதிமுகவால் மீண்டும் ஆட்சியை அமைக்க முடியும் என்று செங்கோட்டையன் வலியுறுத்துகிறார்.
இது அதிமுக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில் திடீரென அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். டெல்லியில் அவர் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அதைத் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
செங்கோட்டையன் பேச்சு
முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் கட்சி வளர வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என செங்கோட்டையன் கூறினார். டெல்லி பயணம் தொடர்பாகக் கேட்ட போது, "நான் ஹரித்துவார் செல்கிறேன், ராமரை தரிசனம் செய்யப் போகிறேன்.. மனசு சரியில்லை என்பதால் கோயிலுக்குப் போகச் சொன்னார்கள். இதனால் நான் ஹரித்துவார் போகிறேன்" என்று கூறினார்.
நாளை செப்டம்பர் 9ம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் மிக முக்கிய தகவலை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்த செங்கோட்டையன் அதுபோல செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர், "கடந்த இரண்டு நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் என்னைச் சந்தித்துப் பேசினர். கலங்கிப் போய்விட வேண்டாம் என்று தொண்டர்கள் சொல்கின்றனர். மேலும், நான் சரியான மற்றும் நியாயமான கோரிக்கையையே வைத்திருப்பதாகவும் தொண்டர்கள் சொல்கிறார்கள்.
காலம் பதில் சொல்லும்
நான் கட்சியின் நலனுக்காகவே இதைச் சொல்கிறேன். என்னுடைய கருத்தைப் பலர் வரவேற்று உள்ளனர். நயினார் நாகேந்திரன், எச் ராஜா உள்ளிட்டோர் வரவேற்று இருக்கின்றனர். நான் பேசிய பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பல முடிவுகளை எடுத்திருக்கிறார். அதற்கு நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும்" என்றார். இந்த பிரஸ் மீட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடுவதை செங்கோட்டையன் தவிர்த்தார்.
எடப்பாடி தரப்பில் இருந்து யாராவது உங்களிடம் பேசினார்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல், நோ கமெண்ட்ஸ் என மட்டும் கூறினார். மேலும், இந்த டெல்லி பயணத்தில் பாஜக தலைவர்களைச் சந்திக்கும் திட்டம் எதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு செங்கோட்டையன், "நான் ஹரித்துவார் சென்று ராமரை தான் சந்திக்கின்றேன். வேறு யாரையும் சந்திக்க வில்லை.. ராமரை சந்தித்து விட்டு நாளை பிற்பகல் விமானத்தில் திரும்பிவிடுவேன்" என்றார்.
ராமரை பார்க்க
அதிமுகவில் இப்படியொரு சூழல் இருக்கும்போது ஹரித்துவாருக்கு எதற்குச் செல்கின்றீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு, "ராமர் தானே கடவுள். இதனாலேயே அவரை பார்க்கப் போகிறேன். மேலும், நான் இங்கு இருந்தால் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே நான் அமைதியாக வழிபட ஹரித்துவார் போகிறேன்.
நான் ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.. இந்தப் பயணத்தில் நான் ராமரை மட்டுமே சந்திக்கச் செல்கிறேன்.. ராமாயணத்தில் இருக்கும் ராமர், கம்பராமாயணத்தில் இருக்கும் அந்த ராமரை சந்திக்கப் போகிறேன். வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை" என்றார்












Click it and Unblock the Notifications