கோவை தெற்கில் பந்தயம் அடிக்கணும்.. செந்தில் பாலாஜிக்கு வேலுமணி செக்
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாடே உற்று நோக்கி கொண்டிருக்கிறது. திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அவரை தோற்கடிக்க அதிமுகவும் தீவிரமாகப் பணியாற்றுவதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டதால் கவனம் ஈர்த்த கோவை தெற்கு தொகுதி, தற்போது திமுக செந்தில் பாலாஜி போட்டியிடுவதால் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அதிமுகவில் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ஜூனன் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே கடந்த 2016 தேர்தலில் இதே தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

கோவை தெற்கில் அதிமுக பிளான்
கோவை மாவட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற நீண்ட கால திட்டத்துடன் செந்தில் பாலாஜி திமுக களமிறக்கியுள்ளது. நம் கோட்டையை விட்டு கொடுத்துவிட கூடாது என்கிற கௌரவ பிரச்சனையில் அதிமுகவும் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "இது நம்முடைய தன்மான பிரச்சனை" என்று பேசினார்.
இதுகுறித்து கோவை அதிமுகவினர் கூறுகையில், "செந்தில் பாலாஜிக்கு கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெறுவது மட்டுமே பணி இல்லை. சொந்த ஊரான கரூரில் திமுக வெற்றி பெற வேண்டும். மேற்கு மண்டல பொறுப்பாளராக சுமார் 30 தொகுதிகளை அவர் கவனிக்க வேண்டும். அதனால் வெளியூரில் பயணித்துக் கொண்டே, தெற்கு தொகுதியிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
களம் சாதகமா
அம்மனுக்கு அப்படி எந்த அழுத்தமும் இல்லை. அவர் இந்த ஒரு தொகுதியை கவனித்தாலே போதும். செந்தில் பாலாஜி வீடு வீடாக பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாகவே, அவர் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தெற்கு தொகுதிக்குள் 13,600 சிறுபான்மை வாக்குகள் உள்ளன. திமுகவின் ஒரே நம்பிக்கை அது மட்டும் தான். கடைசி நேரத்தில் பணம், பரிசு கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
அரசியலில் வேட்பாளரின் தாக்கம் குறிப்பிட்டளவில் தான் இருக்கும். கடந்த காலங்களில் பல பெரிய தலைவர்களை முகம் நிர்வாகிகள் தோற்கடித்துள்ளனர். அம்மன் அர்ஜூனன் இங்கு ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக 61,929 வாக்குகள் பெற்றது. பாஜக 53,579 வாக்குகளும், அதிமுக. 19,044 வாக்குகளும் பெற்றனர்.
பிரச்சார வியூகம்
தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது எங்களுக்கு பலம். தவெக. வருகையால் சிறுபான்மை வாக்குகள் பிரிந்து திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கோவை தெற்கு தொகுதி மக்களை பொறுத்தரை அவர்கள், மண்ணின் மைந்தர்களை விரும்புவார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் கமல்ஹானை வானதி சீனிவாசன் தோற்கடித்தார்.
பிரச்சாரத்திலும் அதிமுக துடிப்பாகவே உள்ளது. அம்மன் அர்ஜூனன் தினசரி காலை 7 மணிக்கு பிரச்சாரம் தொடங்விடுகிறார். காலை 11 மணி வரையும் பிரச்சாரம் செய்யும் அவர், மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையும் வீதி வீதியாக பயணிக்கிறார். எந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறாரோ அந்த பகுதியைச் சேர்ந்த மக்களை அழைத்து கொள்கிறார்கள். தலைக்கு ரூ.200 பணம் கொடுத்து 100 - 200 மக்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கிறார்.
வேலுமணி பிளான்
'செந்தில் பாலாஜி கரூர்காரர். தேர்தல் முடிஞ்சதும் அவர் ஊருக்கு போயிடுவார். விலைவாசி விண்ணை முட்டுது. திமுக ஆட்சியில் டீக்கடை கூட நடத்த முடியவில்லை. நான் எம்எல்ஏவாக இருந்தப்ப இங்க பல திட்டங்களை செஞ்சு கொடுத்துருக்கேன்' என்று இயல்பான மொழியில் பிரச்சாரம் செய்கிறார்.
இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
முக்கியமாக செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஏற்பட்ட நிலை வேலுமணிக்கும் உருவாக வாய்ப்புள்ளது. அதிமுக கட்சிய சிதைத்து பசையுள்ள நிர்வாகிகளை திமுக அழைத்து சென்று விடுவார். வேலுமணியே தெற்கில் நேரடியாக பிரச்சாரம் செய்கிறார். திமுகவுக்கு இணையாக செலவு செய்யவும் தயாராக உள்ளோம்" என்றனர்.












Click it and Unblock the Notifications