ஒரே கல்லில் 2 மாங்காய்.. செந்தில் பாலாஜி மாஸ் பிளான்.. கோவையை தட்டி தூக்கும் திமுக
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக பலவீனமாக உள்ள கொங்கு மண்டலத்திலும் கூட அதிக கவனம் செலுத்துகிறார்கள். கோவையில் திமுக சார்பில் ஒரே வாரத்தில் இரண்டு மாநாடுகளை நடத்த செந்தில் பாலாஜி பலே திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி, வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடுகளை நடத்தி வருகிறார்கள்.

கொங்கு மண்டல அரசியல்
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே மகளிரணி மாநாட்டை நடத்திவிட்டனர். அதனுடன் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்கள். திமுகவுக்கு கடந்த காலங்களில் கொங்கு மண்டலம் சாதகமாக இருந்ததில்லை. இந்தமுறை செந்தில் பாலாஜியை திமுக மேற்கு மண்டல தளபதியாக களமிறக்கியுள்ளனர். கொங்கு அதிமுகவின் கோட்டையாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் என்று அதிமுகவில் அந்தப் பகுதியில் உள்ள அதிமுக தலைவர்கள் கள அரசியலில் வலுவானவர்கள். திமுகவில் அந்தளவுக்கு போர் படை தளபதிகள் இல்லை. இந்த குறையை சரி செய்வதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். ஜெயலலிதா பிறந்தநாளுக்காக அதிமுகவினர் தொகுதி வாரியாக பரிசுகளை கொடுத்து வருகிறார்கள்.
திமுக பிரம்மாண்ட மாநாடுகள்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அந்தக் கட்சியினரும் கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கோவைக்கு பல்வேறு சர்ப்ரைஸ்களுடன் களமிறங்கியுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளுக்கும் திமுக சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகே நடைபெறுகிறது. இதில் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்
அன்றைய தினம் பொள்ளாச்சி பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிட்டுள்ளனர். அதே வாரம் பிப்ரவரி 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு எல் அண்ட் டி பைபாஸ் செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார்.
இதே இடத்தில் தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக பொதுக்கூட்டம் பிரம்மாண்டமான பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின், ராகுல் காந்தி கலந்து கொள்ள இருக்கிறார். அன்றைய தினத்தில் காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செந்தில் பாலாஜி கவனித்து வருகிறார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications