கைக்கொடுக்காத மஞ்சள் சென்டிமென்ட்.. விரக்தியின் உச்சத்தில் செந்தில் பாலாஜி
கோவை: சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தவெக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோவையில் திமுகவை வெற்றி பெறுவதற்காக செந்தில் பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு திமுக 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி மஞ்சள் நிற சென்டிமென்டை கடைபிடித்தார். இருப்பினும் அது அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்தபோது அவரின் கையில் எலுமிச்சை பழம் வைத்திருந்தார். தெற்கு தொகுதிக்குட்பட்ட 11 வார்டுகளிலும் அவர் நடந்தே சென்று பிரச்சாரம் செய்தார். அப்போதும் அவரின் கையில் எலுமிச்சை பழம் வைத்திருந்தார். செந்தில் பாலாஜி எங்கே சென்றாலும் அவரின் கைகளில் எலுமிச்சை பழம் தவறாமல் இடம் பெற்றிருந்தது.

செந்தில் பாலாஜியின் மஞ்சள் சென்டிமென்ட்
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, தெற்கு தொகுதிக்குட்பட்ட திமுக பூத் ஏஜென்ட்கள் மஞ்சள் நிற துண்டு அணிந்திருந்தனர். அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் அதிகாரிகள் மஞ்சள் துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் கோவை மற்றும் கரூரில் வாக்கு எண்ணும் மையங்களில் திமுக ஏஜென்ட்டுகள் மஞ்சள் துண்டு அணிந்து சென்றனர். காவல்துறையினர் அவற்றை நுழைவு வாயிலேயே பறிமுதல் செய்தனர். பலர் மஞ்சள் சட்டையும் அணிந்திருந்தனர். மேலும் தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டைக்கு மஞ்சள் நிறத்தில் டேக் அணிந்திருந்தனர்.
மஞ்சள் மயம்
செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள், ஏஜென்ட்கள், திமுக ஆதரவு சுயேச்சைகள் பலரும் மஞ்சள் நிற டேக் அணிந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மற்றும் ஒவ்வொரு சுற்று வாரியாக பதிவாகும் வாக்கு விபரங்களை எழுதுவதற்கு திமுகவினருக்கு 2 விதமான நோட்டுகள் வழங்கப்பட்டன.
அந்த 2 நோட்டுகளின் அட்டையும் மஞ்சள் நிறத்தில் தான் இருந்தன. தேர்தலுக்கு முன்னதாக கோவையில் திமுகவினர் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர்களின் விபரங்களை ஆவணப்படுத்துவதற்கு வழங்கிய நோட்டும் மஞ்சள் நிறத்தில் தான் இருந்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மஞ்சள் நிற துண்டு அணிவது போல, செந்தில் பாலாஜியும் மஞ்சள் சென்டிமென்ட் கடைபிடிப்பதாக கூறப்பட்டது.
கைக்கொடுக்காததால் விரக்தி
ஆனால் இதற்கு கருணாநிதியின் மஞ்சள் துண்டு சென்டிமென்ட் மட்டுமே காரணமில்லையாம். செந்தில் பாலாஜிக்கு கடவுள் பக்தி அதிகம். பிரச்சாரத்தின்போது அவர் வழியில் இருந்த அனைத்து கோயில்களிலும் வழிபட்டார். எலுமிச்சையை உடன் வைத்துக் கொண்டால் கெட்ட சக்திகள் எதுவும் அண்டாது. பவர்புல்லாக இருக்கலாம் என்பது ஜோதிட நம்பிக்கை. அதற்காக தான் மஞ்சள் நிற சென்டிமென்டை அவர் கடைபிடித்ததாக கூறப்படுகிறது.
ஆனாலும் அந்த சென்டிமென்ட் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. வாக்கு எண்ணும் நாளில், காலை முதல் மாலை வரை அவர் தெற்கு தொகுதிக்குட்பட்ட மையத்தில் இருந்து வெளியே வரவே இல்லை. தவெக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சமமாக வாக்குகளை வாங்கி போட்டி கொடுத்தார். இறுதியில் 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜி வென்றாலும், கோவையின் மற்ற தொகுதிகளில் திமுக தோல்வியடைந்ததால் அவர் சோகமாக வெளியேறினார்.












Click it and Unblock the Notifications