முதல்வரை எல்லோரும் பாராட்டுறாங்க..கோவையில் எப்படி ஜெயிக்குறோம் பாருங்க.. செந்தில் பாலாஜி நம்பிக்கை
கோவை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர் எனவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முழு வெற்றி பெறும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் வேட்பு மனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளயதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாக்களர்களை கவர வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
2021 சட்டமன்ற தேர்தில் தமிழ்நாடு முழுவதும் திமுக அமோகவெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் தோல்வியை சந்தித்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. இதையடுத்து கோவையில் தனிக்கவனம் செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை திமுகவுக்கு பொருப்பாளராக நியமித்துள்ளார். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இரு நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார்.

திமுக மீது நம்பிக்கை
நிகழ்ச்சிக்கும் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வெறும் 8 மாதங்களில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது செயல்பாடுகளை அனைத்து தரப்பினருமே பாராட்டுகின்றனர்.
ஆகவே தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் தி.மு.க. மீது முழு நம்பிக்கை வைத்து வாக்களிப்பார்கள்.
Recommended Video

பெரிய மாற்றம்
கோவை மாவட்டத்தை பொருத்தவரை 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 33 பேர் ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு வெற்றி பெறுவார்கள்.
காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்கள். தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார்.












Click it and Unblock the Notifications