ஷவர்மா ஷாக்.. ஆர்டர் செய்த பார்சலை பிரித்து.. மயங்கியே விழுந்த இளைஞர்.. கோவையில் பரபரப்பு
ஷவர்மா சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: ஷவர்மா சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மே மாதம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அந்த மாணவியுடன், அவருடன் பள்ளியில் படிக்கும் 17 மாணவர்களும் சேர்ந்து ஒரு பாஸ்ட் புட் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர்.
அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. அவர்களை பரிசோதித்ததில் அனைவரும் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர்..
இதில், மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சென்ற போலீஸார், அங்கு உணவு சமைத்தவரை கைது செய்ததுடன், அந்த கடைக்கும் சீல் வைத்தனர்...
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பமான உணவாக ஷவர்மா உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இந்த அச்சம் படர்ந்தது.. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா உணவு தயாராகும் உணவகங்களில் சோதனை செய்து, கெட்டுபோன இறைச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது என ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் நுழைந்து, அதிரடி சோதனைகளை நடத்தி, அங்கிருந்த கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்..
ஒரேநேரத்தில் 5 பேரிடம் தங்கதாலி பறிப்பு.. கதறிய பெண்கள்.. திருவண்ணாமலை திருக்கல்யாணவிழாவில் கண்ணீர்
ஷவர்மா பீதி
மேலும் ஷவர்மா தயாரிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை தொடர்ச்சியாக தந்தனர்.. அந்தவகையில், சரியாக வேகாத ஷவர்மாவை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கையை விடுத்தனர்.. இந்நிலையில், மீண்டும் ஒரு ஷவர்மா சம்பவம் நம் கோவையில் நடந்துள்ளது..
ஷவர்மா
கோவை மாவட்டம் அன்னூரில் சத்தியமங்கலம் சாலையில் கடை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ்.. 28 வயதாகிறது.. இவர் நேற்றுமுன்தினம் மாலை அன்னூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்... ஷவர்மா வீட்டுக்கு வந்ததுமே, அதை பிரித்து சாப்பிட ஆரம்பித்துள்ளார்.. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது... அப்போதுதான், பாக்கெட்டில் இருந்த ஷவர்மாவை நுகர்ந்து பார்த்துள்ளார்..
ஆண்ட்ரூஸ்
அதில் கெட்டுப்போன வாசம் வரவும், அதிர்ந்து போயுள்ளனர்.. உடனே இதுகுறித்து நண்பர்களிடம் சொல்லவும், அவர்களும் விரைந்து வீட்டுக்கு வந்தனர். பிறகு அனைவரும் கிளம்பி, ஷவர்மா ஆர்டர் செய்த சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.. ஆனால், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.. இதனால், மேலும் ஆத்திரமடைந்த ஆண்ட்ரூஸ் மற்றும் நண்பர்கள், அந்த கடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கெட்டுப் போன உணவு
விஷயம் அறிந்ததுமே, அந்த கடையில் ஏற்கனவே சாப்பிட்டிருந்தவர்களும் ஒன்றுகூடிவிட்டனர்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.. இது தொடர்பான சம்பவமும் சோஷியல் மீடியாவில் பரவ ஆரம்பித்துவிடவும், இறுதியில், இந்த தகவல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
மட்டன்
அப்போது அங்கு காலாவதியான மசாலா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து, கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர்... பிறகு, அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து மட்டன், சிக்கன் கடைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்தவர்களிடம் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவு பண்டங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து சென்றனர்.