கோவை டீ கடையில் கொடூரம்.. வட மாநில இளைஞர்கள் கத்தியால் குத்தி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். திருத்தணி அருகே ஓடும் ரயிலில் வட மாநில இளைஞரை, கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே டீக்கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்களை, அங்கிருந்தவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வட மாநில தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். கட்டுமானம், உணவு, நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். வட மாநில தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அவ்வபோது அவர்கள் பிரச்சனைகளிலும் சிக்குகிறார்கள்.

திருத்தணி அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த வட மாநில இளைஞரை, உள்ளூர் சிறார்கள் கொடூரமாக தாக்கி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த அந்த இளைஞரை, கஞ்சா பாதையில் தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கின்றன. திருப்பூர் ரயில் நிலையத்தில், ஒருவர் போலீஸாரை கத்தியை காண்பித்து மிரட்டி தாக்க முயற்சி செய்தார். இதேபோல கோவையிலும் ஓர் சம்பவம் நடந்துள்ளது.
கோவை டீக்கடையில் கொடுமை
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ் மற்றும் கோவிந்த் கோன்ட் என்ற இளைஞர்கள், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மர ஆசாரியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 15 ஆம் தேதி கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றனர்.
அப்போது அந்தக் கடையில் இருந்தவர்கள் வட மாநில இளைஞர்களிடம் தமிழில் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. இதையடுத்து வட மாநில இளைஞர்கள், சைகையில் புரிய வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது புரியாமல் கேள்வி கேட்டவர்கள், வட மாநில தொழிலாளர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வட மாநில இளைஞர்கள் கத்தியால் தாக்குதல்
மேலும் அவர்களை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து டீ கடையில் இருந்த ஊழியர்களும், அருகில் இருந்த பொதுமக்களும் அவர்களிடம் இருந்து வட மாநில இளைஞர்களை மீட்டனர். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள், வட மாநில தொழிலாளர்களை மிரட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
காயமடைந்த வட மாநில இளைஞர்கள் இருவரும் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications