இந்நேரம் 35 சீட் வரை ஜெயித்திருப்போம்.. அண்ணாமலையால் எல்லாம் போச்சு.. ஆதங்கத்தை கொட்டிய வேலுமணி!
கோவை: அதிமுக பாஜக கூட்டணி அமைத்திருந்தால் 35 தொகுதிகள் வரை வென்றிருப்போம் எனக் கூறியுள்ளார் எஸ்பி வேலுமணி. கோவையில் அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்துள்ள நிலையில் வேலுமணியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று, 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வென்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், 2,36,490 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிமுகவுக்கு எப்போதும் நிலையாக இருந்து வந்த 32 சதவீத வாக்குகள், 17 சதவீதமாக சரிந்துள்ளது. தங்கள் கோட்டையான கோவையை இழந்துள்ளது அதிமுக.

கோட்டையை இழந்த அதிமுக: 2021 சட்டசபைத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் வென்றது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தவிர, அனைத்து இடங்களையும் அதிமுக நேரடியாக கைப்பற்றியது. அப்படி இருந்தும் அடுத்த 3 ஆண்டுகளில் கோவையில் 3வது இடம் பிடிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது அதிமுக.
இந்நிலையில், கோவைல் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "கோவை மக்கள் ஒரு தீர்ப்பை அளித்துள்ளனர். அவர்களது தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது. அதிமுகவை பொறுத்தவரையில் பல தேர்தல்களைக் கண்ட இயக்கம்.
வளர்ச்சிதான் - சொல்வது வேலுமணி: கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர் கொண்ட போது பல்வேறு கட்சிகள் பாஜக உட்படக் கூட்டணியில் இருந்தது. அப்போது அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 19.35 சதவீதம் தான். இன்றைக்கு தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மட்டுமே கூட்டணி வைத்து 20.46 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளோம்.
தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசியுள்ளார். அவரது கட்சிக்கு வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதனை விட்டு விட்டு 2-ஆம் கட்ட அதிமுக தலைவர்கள் அதிகமாக பேசினார்கள் என கூறுவது சரியல்ல.
35 சீட் ஜெயிச்சிருப்போம்: இதற்கு முன் பாஜக அதிமுக கூட்டணி இருந்த போது தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் போன்றவர்கள் பாஜக மாநில தலைவர்களாக இருந்தார்கள். ஆனால் அப்போது எல்லாம் எந்த பிரச்சனையும் வந்தது கிடையாது.
அண்ணாமலை வந்த பிறகு தான் அண்ணா, ஜெயலலிதா, ஆகியோர் குறித்தும் கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு அண்ணாமலைதான் காரணம். அதே கூட்டணி தொடர்ந்து இருந்தால் 30 முதல் 35 சீட்கள் கிடைத்து இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் புகைச்சல்: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகக்கூடாது என எஸ்.பி.வேலுமணி முன்பே கூறியதாக சொல்லப்பட்டது. அவரது கருத்துக்கு மாறாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்ததால், அவர் இந்த முறை தீவிரமாக தேர்தல் பணியாற்றவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என எஸ்பி வேலுமணி தற்போது பேசியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை, அதிமுகவை டேமேஜ் செய்து பேசி வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி என வேலுமணி பேசுகிறாரே என அதிமுக தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications