SP Velumani: மீண்டும் வாகை சூடுவாரா வேலுமணி.. தொண்டாமுத்தூர் தொகுதி நிலவரம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவை மாவட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக கோட்டையாக உள்ள கோவையில் ஓட்டை போட திமுக முயற்சித்து வருகிறது. தொண்டாமுத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4வது முறையாக வேலுமணி வெற்றி பெறுவாரா, திமுக கடுமையான போட்டி கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொண்டாமுத்தூர் தொகுதியில் 2,93,324 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 2,59,606 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவில் முன்னாள் ஊராட்சி தலைவர் என்.ஆர்.கார்த்திகேயன், தவெகவில் சதீஷ், நாம் தமிழர் கட்சியில் ரஜபு நிஷா உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

1 லட்சம் வாக்குகள் வித்தியாசம்
கடந்த 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டமன்ற தேர்தலில் அங்கு வேலுமணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016 தேர்தலில் சுமார் 60,000 வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த 2021 தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வேலுமணி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என வேலுமணி கூறியுள்ளார்.
வேலுமணிக்கு எதிராக திமுக இந்தமுறை தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளனர். செந்தில் பாலாஜியே நேரடியாக இறங்கி வியூகங்களை வகுத்துள்ளார். தவெக போட்டியிட்டுள்ள சதீஷ், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி ராஜூவின் மகன் ஆவார். இந்த ராஜூ தான் வேலுமணியின் ஆரம்பகால குரு. அதனால் தவெக கட்சியை கடந்து சதீஷ்க்கும் அங்கு செல்வாக்கு உள்ளது.
3 முறை எம்எல்ஏ
ஆனாலும் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக இருப்பதாலும், அதில் 2 முறை (2011-2021) அமைச்சராக இருந்ததாலும் வேலுமணி தொகுதிக்கு பல்வேறு பணிகளை செய்துள்ளார். அங்கு அவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அங்கு சிறுபான்மை மக்கள் கணிசமாக உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது வேலுமணிக்கு மைனஸ். அந்த வகையில், இன்று எஸ்பி வேலுமணி 4 ஆவது முறையாக வாகை சூடுவாரா, திமுக கடும் போட்டியைக் கொடுக்குமா, தவெக சதீஷ் அதிக வாக்குகளைப் பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications