குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட 100 பவுன் நகைகள்.. ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையில் அடுத்த அதிர்ச்சி!
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.6 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 100 பவுன் நகைகள் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கோவை 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபலமான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இரவில் நூற்றுக்கணக்கான பவுன் தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை போன நகைகள் 4.6 கிலோ, அதாவது 575 சவரன் எனக் கூறப்பட்டது. பிரபல நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, கோவை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து சிறப்பான விசாரணை மேற்கொண்டதன் விளைவாக நகையை கொள்ளையடித்த நபர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த விஜய் என்பதும், அவர் கொள்ளையடித்த 460 பவுன் நகையில் 320 பவுன் நகையை அரூர் பகுதியில் உள்ள அவரது மனைவி நர்மதாவிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நகைகள் மீட்கப்பட்டது.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடிக்க ஸ்கெட்ச் போட்டது, நகைகளை மறைத்து வைத்து, தப்பிச் செல்ல உதவியது என விஜய்க்கு அவரது மனைவி நர்மதா மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, கொள்ளையன் விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நர்மதாவின் தாய் யோகராணியிடம் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரிடம் 100 பவுன் நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை தருமபுரி அகதிகள் முகாமில் குப்பைத் தொட்டிகளுக்குள் யோகராணி மறைத்து வைத்திருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டன.
மேலும் வைர நகைகள் சிலவற்றை சாலையோரத்தில் ஒரு அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்து வைத்து இருந்ததையும் தனிப்படை போலீசார் மீட்டனர். கடந்த வியாழக்கிழமை கொள்ளையன் விஜய்யின் மனைவி நர்மதவிடம் இருந்து 3 கிலோ நகையை மீட்டு இருந்தனர். தற்போது விஜய்யின் மாமியார் யோகராணியிடம் இருந்து சுமார் 1 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் அரை கிலோ தங்க நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை. தலைமறைவான கொள்ளையன் விஜய்யிடம் அந்த நகைகள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தருமபுரி இலங்கை அகதிகள் முகாமில் கைது செய்யப்பட்ட யோகராணியை கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விஜய் எங்கு தலைமறைவாக இருக்கிறான் என்பதை கண்டறிய, அவரது மனைவி நர்மதா மற்றும் யோகராணியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விசாரணையில் நர்மதா அளித்த தகவல்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கொள்ளையன் விஜய்யை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜய்யின் மாமியார் யோகராணியை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications