டெல்லி ஏர்போர்ட்டில் 45 நிமிடம் காத்திருந்த பிரதமர் மோடி! நீட் மாணவர்களுக்காக செய்த காரியம்
டெல்லி: நீட் மறு தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். முதல் முறை நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் கசிந்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், மறு தேர்வில் குளறுபடி எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக மிகுந்த கவனத்துடன் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
சரி.. இதற்கும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் காத்திருந்ததற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

45 நிமிடங்கள் காத்திருந்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று காலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்றார். அங்கு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மூன்று போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லி வந்தார். சரியாக மதியம் 1.15 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.
அங்கிருந்து தனது இல்லத்திற்கு காரில் பிரதமர் மோடி புறப்பட கான்வாய் அனைத்தும் தயாராக இருந்தது. எனினும், நீட் தேர்வு தொடங்க இருந்த நேரம் என்பதால், தனது பயணத்தால் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனக்கருதிய பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே 45 நிமிடம் காத்திருந்துள்ளார். நீட் தேர்வு தொடங்கிய 2 மணிக்கு பிறகே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது
பிரதமர் மோடியின் பயணத்தால் சாலையில் சிக்னல்கள் மற்றும் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும். இதுபோன்ற காரணத்தால் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி, 45 நிமிடம் காத்திருக்கும் முடிவை எடுத்ததாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பலத்த பாதுகாப்புடன் நீட் தேர்வு
இந்தியாவில் 5,440 மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் சேர்த்து 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேசிய தேர்வு முகமை (NTA) இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. நாடு முழுவதும் 95,000-க்கும் மேற்பட்ட அறைகள் 1.38 லட்சம் சிசிடிவி கேமராக்கள் மூலம் தேர்வு கண்காணிக்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது.
மின்னணு முறைகேடுகளைத் தடுக்க 51,000-க்கும் மேற்பட்ட சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு சரியாகவும், பாதுகாப்பாகவும் நடக்க 6,700 பார்வையாளர்கள், 100-க்கும் மேற்பட்ட மெய்நிகர் கண்காணிப்பாளர்கள், 39,000 சோதனை அதிகாரிகள், 48,000-க்கும் மேற்பட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவியர் சேர்க்கை என்பது நீட் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்களை வைத்தே நடைபெறுகிறது. நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய நுழைவுத்தேர்வாக இதுவே உள்ளது.














Click it and Unblock the Notifications