பத்திரிகையாளர்களை குரங்கு என சொல்லலை-குரங்கு போல என்றேன்- மன்னிப்பா? ரத்தத்திலேயே கிடையாது: அண்ணாமலை
கோவை: பத்திரிகையாளர்களை தாம் குரங்கு என விமர்சிக்கவில்லை; குரங்கு போல ஏன் தாவி வருகிறீர்கள் என கேட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களை வெளியிட்டார். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமலேயே அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் விமர்சனம் தொடர்பாக கடலூரில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த அண்ணாமலை, பத்திரிகையாளர்களை குரங்குகள் என விமர்சித்திருந்தார். மேலும் நாய், பேய், சாராயம் விக்கிறவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறினார். இது மிகப் பெரும் சர்ச்சையானது.
பத்திரிகையாளர்களை அண்ணாமலை தொடர்ந்து அவமதிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலையை கண்டித்தனர். ஆனால் இதற்கும் அண்ணாமலை ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.

கோவையில் அண்ணாமலை
இந்நிலையில் இன்று கோவையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த உக்கடம் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் அண்ணாமலை. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் குரங்குகள் என விமர்சித்தது குறித்து கேள்வி கேட்டனர் பத்திரிகையாளர்கள்.

வரம்பு மீறுகிறார்களே
அப்போது அண்ணாமலை அளித்த விளக்கம்: நான் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறேன் என்றெல்லாம் சொல்லக் கூடாது. நான் எங்க கோபப்படுகிறேன். சில நண்பர்கள் வரம்புமீறும் போது அப்படி நிகழ்கிறது. அது தவறான கோபம் கிடையாது. சில டிவி நிறுவனங்கள், தத்துவார்த்தம் சார்ந்து திரும்ப திரும்ப சில கேள்விகளை முன்வைக்கிறார்கள். சென்னை கமலாலயத்தில் நடந்த சமபவத்துக்கு செய்தியாளர்களை அழைத்து நானே வருத்தம் தெரிவித்திருக்கிறேன்.

குரங்குன்னு சொல்லலையே
பத்திரிகையாளர்களைப் பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை. பத்திரிகையாளர்களைப் பார்த்து ஏன் குரங்கு போல தாவி தாவி வந்து என்னை பேசவிடாமல் செய்கிறீர்கள் என்றுதான் சொன்னேன். இந்த 2-ம் வேறு. நீங்க குரங்கு.. பத்திரிகையாளர் குரங்கு என்று எங்கேயும் நான் சொல்லவில்லை. நான் சொல்வதை மாற்றிப் பேசுகிறவன் கிடையாது. குரங்கும் குரங்கு மாதிரி என்பதும் ஒன்று என நினைத்தால் நான் எதுவும் செய்ய முடியாது. நான் சொன்னது உவமை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

மன்னிப்பு கேட்க முடியாது
அதேநேரத்தில் அண்ணாமலையின் ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் பத்திரிகையாளர்களை இழிவாக பேசுவது குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.ஆனால் அண்ணாமலையோ, நான் எந்த தவறும் செய்யவில்லை, மன்னிப்பு கேட்கமாட்டேன்..என் ரத்தத்திலேயே கிடையாது.. என் நியூஸை, என் பிரஸ்மீட்டை புறக்கணிப்பது, வெளியிடுவது உங்க விருப்பம்.. உங்க உரிமை என்றார்.












Click it and Unblock the Notifications