ராணுவ ரகசியமோ! வெளியே சொல்ல முடியாத அளவு என்ன மேட்டர்? ஆளுநர் - ரஜினி சந்திப்பு பற்றி கே.எஸ்.அழகிரி
கோவை: நடிகர் ரஜினிகாந்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பேசிக்கொண்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Recommended Video
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சியில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அமைதி பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். அத்துடன் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவில் பஞ்சு கிடைக்காத காரணத்தினால் நூல் விலை உயர்ந்தது. தற்போது அதிக விலை கொடுத்து நூலை உற்பத்தி செய்த பிறகு நூல் விலை வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?
அம்பானி அதானி
இந்தியாவில் நெசவுப் பொருளாதாரம் ஜவுளி தொழில் அடியோடு விழ்ந்துவிட்டது. இதற்கு மோடியின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். இந்தியாவில் பஞ்சை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறினார்கள். பஞ்சு மார்க்கெட் என்பது விவசாயிகள் கையில் இல்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில்தான் உள்ளது. அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகள் பஞ்சை வாங்கி பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
பஞ்சு தட்டுப்பாடு
அவர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த பிறகு அரசு ஏற்றுமதிக்கு உத்தரவிட்டது. ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைப்பதால் ஏராளமான பஞ்சை ஏற்றுமதி செய்துவிட்டார்கள். அதன் விளைவு உள்நாட்டில் பஞ்சு கிடைக்காத நிலை ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய உத்தரவிட்டு பஞ்சு இறக்குமதிக்கு காலம் கடந்த காரணத்தால் கடந்த ஓராண்டில் நூல், ஜவுளி உள்ளிட்ட விற்பனை குறைந்து நெசவுத்தொழில் நலிவடைந்து விட்டது.
ஆளுநர் - ரவி பேசியது என்ன?
விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வருவாய் தருவது ஜவுளி தொழில்தான். தற்போது இந்தியாவில் அது நலிவடைந்ததற்கு மோடி அரசின் தவறான ஏற்றுமதி இறக்குமதி பொருளாதார கொள்கை தான் காரணம். இதற்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும். நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ரவி சந்தித்துக்கொண்டபோது வெளியில் சொல்ல முடியாத ஒன்றை ஏன் பேசினார்கள் என்பது என் கேள்வி?
ராணுவ ரகசியமா?
தெளிவானவர்கள் பேசும்போது மக்களுக்கும் தெரிய வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தம், ராணுவ ரகசியங்களை வெளியில் பேசக்கூடாது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ஆளுநர் பேசியதை வெளியில் சொல்லக்கூடாது என்றால் அப்படி என்ன பேசினார்கள்?
புலனாய்வுத் துறையைவிட்டு விசாரிக்க வேண்டுமா? இல்லை இவர்களே சொல்லுவார்களா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." என்று தெரிவித்தார்.